மத்திய மந்திரி அனுராக் தாகூரிடம் 5 முக்கிய கோரிக்கைகளை வைத்த மல்யுத்த வீராங்கனைகள்


மத்திய மந்திரி அனுராக் தாகூரிடம் 5 முக்கிய கோரிக்கைகளை வைத்த மல்யுத்த வீராங்கனைகள்
x
தினத்தந்தி 7 Jun 2023 10:29 AM GMT (Updated: 7 Jun 2023 10:42 AM GMT)

மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

புதுடெல்லி

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது போக்சோ உள்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பாலியல் வழக்கு தொடர்பாக பிரிஜ் பூஷணிடம் டெல்லி போலீசார் இதுவரை 2 முறை விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், இதுவரை சரண்சிங் கைது செய்யப்படவில்லை.

அதேவேளை, பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷணை கைது செய்ய வேண்டும் என கூறி மலியுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் நாட்டுக்காக வாங்கிய பதக்கங்களை கங்கை நதியில் வீச முயற்சித்தனர். ஆனால், விவசாய சங்கத்தினர் தலையிட்டு பதக்கங்களை கங்கையில் வீசும் முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷணை கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிரச்சினைகள் தொடர்பாக மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் பேச்ச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. மல்யுத்த வீரர், வீராங்கனை பேச்சுவார்த்தைக்கு வருமாறு நான் மீண்டும் அழைக்கிறேன்' என தெரிவித்து இருந்தார்.

இதனை ஏற்று கொண்ட மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் டிகாயிட் விளையாட்டு மந்திரி அனுராக் தாகூரை அவரது வீட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு சென்ற மல்யுத்த வீராங்கனைகள், அவரிடம் 5 முக்கிய கோரிக்கைகளை வைத்தனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மல்யுத்த சங்கத்தின் தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் மல்யுத்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக் கூடாது.

மல்யுத்த அமைப்பிற்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும், டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தங்கள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும், பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்ய வேண்டும் ஆகிய 5 முக்கிய கோரிக்கைகளை வீராங்கனைகள் முன்வைத்து உள்ளனர்.


Next Story