நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா


நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா
x
தினத்தந்தி 21 Jun 2023 6:52 AM GMT (Updated: 21 Jun 2023 7:05 AM GMT)

சர்வதேச யோகா தினம் இன்று (புதன்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது.

டெல்லி,

இந்தியாவில் பதஞ்சலி முனிவரால் தோன்றி வளர்ந்த ஓர் ஒழுக்க நெறி யோகா. உடல், மனம், அறிவு, உணர்வு, சகிப்புதன்மை மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கும், சமநிலையில் வாழ்வதற்கும் உரிய கலை பயிற்சியாக யோகா விளங்குகிறது.

மன அழுத்த நிவாரணி

இளைஞர்கள் பலர் கட்டுடலுக்காக ஜிம்முக்கு செல்கிறார்கள். ஆனால் கட்டுடலுடன் மனதையும் கட்டுப்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது யோகா. இந்த பயிற்சியை செய்ய எந்த ஒரு உபகரணங்களும் தேவையில்லை. மருந்துகள் இல்லாமல் நோயை விரட்டுவது இதன் தனித்துவ குணம். யோகாவில் ஏராளமான ஆசனங்கள் உள்ளன. கல்வியை போல தான் இதுவும் கடல் போன்றது. இருப்பினும் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை அடிப்படை யோகா பயிற்சிகளை செய்தாலே நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உழைக்க ஆற்றலை தருகிறது.

இன்றைய குடும்ப, பணி சூழல் மன அழுத்தம் நிறைந்ததாக மாறி இருக்கிறது. மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கும் சிறந்த நிவாரணியாக யோகா விளங்குகிறது.

நேர்மறை எண்ணங்கள்

எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல், நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களால் தான் ஒரு செயலை சாதிக்க முடியும் என்பது அனைவராலும் அறியப்பட்ட விஷயம். இந்த நேர்மறை எண்ணங்களுக்கு உரிய ஆற்றல் யோகா செய்வதன் மூலம் அதிக அளவில் கிடைக்கிறது. இதை காலப்போக்கில் உணர முடியும் என்பது தான் யோகாவின் ஆச்சரியமான விஷயம்.

நேர்த்தியான முறையில் வளைந்து பயிற்சி செய்வதன் மூலம் தசைகளும், எலும்புகளும் வலுவடைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்கிறது.

இன்றைய உலகில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் பரவலான வியாதியாக உருவெடுத்துள்ளது. யோகாவின் மூலம் இந்த வியாதியை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அனைத்து நேரங்களிலும் மகிழ்ச்சியாக இருக்கவும், சிறந்த தூக்கத்திற்கும் யோகா உதவுகிறது.

வயது தடை இல்லை

யோகாவின் அழகு என்னவென்றால், அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு வயது ஒரு தடை இல்லை. உடல் உருவமும் பிரச்சினை இல்லை. இருப்பினும் இளம் வயது முதல் யோகா பயிற்சியை மேற்கொண்டு வந்தால், உடலில் நெகிழ்வு தன்மை அதிகரிக்கும். அதாவது உடலை வில்லாக வளைக்க முடியும்.

யோகா ரத்த ஓட்ட அமைப்பு, செரிமான செயல்முறை, நரம்பு மற்றும் நாளமில்லா அமைப்புகளை தூண்ட உதவுகிறது. சுவாச பயிற்சிகள் நுரையீரலின் திறனை அதிகரிக்கிறது. தியானம் மன அமைதியை மேம்படுத்துகிறது. இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருப்பதை யோகா செய்பவர்களால் உணர முடிகிறது.

இருப்பினும் சரியான பயிற்சியாளர்களிடம் யோகா ஆசனங்களை கற்றுக்கொள்ள வேண்டும். ஏடாக்கூடமாக செய்து உடலில் சுளுக்கு, தசைநார்கள் கிழிதல் நிலைக்கு ஆளாகி விடக்கூடாது.



9-வது சர்வதேச யோகா தினம்

இந்தியாவில் சமீப காலமாக யோகா கலை பிரபலமாகி வருகிறது. பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் தற்போது பயிற்சி செய்து வருவதால், இது முன் எப்போதையும் விட மிகவும் பிரபலமாகிவிட்டது.

குறிப்பாக யோகாவை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற உறுதியான முடிவு எடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. ஜூன் மாதம் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பரில் முன்மொழிந்தார். இந்த கோரிக்கை அதே ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந் தேதி ஐ.நா. சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு 175 உறுப்புநாடுகள் ஆதரவு அளித்தன.

இதையடுத்து 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய தருணமாக இன்று (புதன்கிழமை) அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.வில் கொண்டாடப்படும் 9-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.


Next Story