இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை


இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 24 April 2023 6:45 PM GMT (Updated: 24 April 2023 6:47 PM GMT)

திருமணமான 5 மாதத்தில் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததை அறிந்த இளம்பெண் மனவேதனையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மங்களூரு-

திருமணமான 5 மாதத்தில் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததை அறிந்த இளம்பெண் மனவேதனையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளத்தொடர்பு

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இந்தபெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கவுசல்யா(வயது 28). இவரும், இவருடைய பக்கத்து வீட்டில் வசித்த சுதாகர் என்ற வாலிபரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் அதே பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சுதாகரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் கவுசல்யா அவரை கண்காணித்தார். அப்போது சுதாகருக்கும், அவருடைய உறவுக்கார பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.

சமாதானம் செய்தனர்

இதனால் ஆத்திரம் அடைந்த கவுசல்யா கணவரை கண்டித்தார். அப்போது சுதாகருக்கு ஆதரவாக அவருடைய தந்தையும், தாயும் பேசியுள்ளனர். மேலும் அவர்கள் கவுசல்யாவையும் திட்டி உள்ளனர். இதனால் கவுசல்யாவுக்கும், அவருடைய மாமனார், மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உண்டானது.

இதனால் மனவேதனை அடைந்த கவுசல்யா இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் சுதாகரை அழைத்து பேசினர். அப்போது அவர், தான் தன்னுடைய மனைவியை பிரிந்துவிட்டு, கள்ளக்காதலியுடன் சேர திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார். இருப்பினும் இருவரையும் சமாதானம் செய்து அவர்களை குடும்பத்தினர் சேர்த்து வைத்தனர்.

வாட்ஸ்-அப் தகவல்கள்

இந்த நிலையில் சுதாகருக்கு, அவரது கள்ளக்காதலி அனுப்பிய வாட்ஸ்-அப் தகவல்களை கவுசல்யா படித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கவுசல்யா மீண்டும் கடந்த 20-ந் தேதி சுதாகருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது கவுசல்யாவை, சுதாகர் சரமாரியாக தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கவுசல்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். இதுபற்றி அவர் தனது பெற்றோரிடமும் தெரிவித்தார். பதறிப்போன அவர்கள் விரைந்து சென்று கவுசல்யாவை மீட்டு சிகிச்சைக்காக உஜிரியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சோகம்

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவுசல்யா நேற்று முன்தினம் பலியானார். இதையடுத்து இச்சம்பவம் பற்றி பெல்தங்கடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் கவுசல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story