ஹாசனில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை


ஹாசனில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
x

ஹாசனில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

ஹாசன்

ஹாசனில், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது கணவர் உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழந்தை இல்லை

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா படவலுஹிப்பே கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா (வயது 31). இவருக்கும் வித்யாநகர் பகுதியை சேர்ந்தவர் அக்சய் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. திருமணத்தின்போது ரஞ்சிதாவின் பெற்றோர் போதிய அளவு பணம், நகைகளை வரதட்சணையாக வழங்கியுள்ளனர். இதுவரை தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

மேலும் அக்சய் வீட்டார், ரஞ்சிதாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

பெண் தற்கொலை

இந்நிலையில் நேற்று ரஞ்சிதா தனது கணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ரஞ்சிதாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு அக்சய் தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கணவன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். மேலும் கோபத்தில் கணவன் வீட்டார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இது பற்றி ஹாசன் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கணவரிடம் விசாரணை

பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ரஞ்சிதாவின் பெற்றோர், மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கணவர் குடும்பத்தினர் தான் கொலை செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர்.

மேலும் இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் ஹாசன் டவுன் போலீசார் வழக்குப்பதிவு கணவன் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story