பத்ராவதியில் தூக்குப்போட்டு வாலிபர் சாவு: தற்கொலைக்கு துண்டியதாக 4 போலீசார் மீது வழக்கு


பத்ராவதியில் தூக்குப்போட்டு வாலிபர் சாவு:  தற்கொலைக்கு துண்டியதாக 4 போலீசார் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 Jun 2023 6:45 PM GMT (Updated: 20 Jun 2023 6:46 PM GMT)

பத்ராவதியில் தூக்குப்போட்டு வாலிபர் இறந்த சம்பவத்தில் தற்கொலைக்கு துண்டியதாக 4 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவமொக்கா-

பத்ராவதியில் தூக்குப்போட்டு வாலிபர் இறந்த சம்பவத்தில் தற்கொலைக்கு துண்டியதாக 4 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணை நடத்தினர்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா கன்னேகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில், கடந்த 14-ந் தேதி பொதுஇடத்தில் மதுஅருந்தியதாக கூறி மஞ்சுநாத் உள்பட 15 பேரை ஹோலேஒன்னூர் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களை விடுவித்தனர். இந்தநிலையில் மறுநாள் காலை தனக்கு நடந்ததை மனைவியிடம் மஞ்சுநாத் கூறியுள்ளார். மேலும் அவர் மனவேதனையில் இருந்துள்ளார். இந்தநிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மஞ்சுநாத் மின்விசிறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்த ஹோலேஒன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மஞ்சுநாத் சாவிற்கு போலீசார் தான் காரணம் என கூறி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் ஹோலேஒன்னூர் போலீஸ் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில்,

மஞ்சுநாத்தை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று மது அருந்தியதாக கூறி போலீசார் தாக்கி உள்ளனர்.

4 போலீசார் மீது வழக்கு

மேலும் தரக்குறைவாக அவரை பேசி உள்ளனர். இதனால் மஞ்சுநாத் மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து உள்ளார் என கூறினர். இதுகுறித்து மாவட்ட சூப்பிரண்டு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் ஹோலேஒன்னூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் மெஹபூப் சாப், லிங்க கவுடா, சுதர்சன் மற்றும் விஸ்வநாத் ஆகிய 4 போலீசார் மீது மஞ்சுநாத்தை தற்கொலைக்கு துண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story