அரசு அதிகாரியிடம் பணம் பறிக்க முயன்ற போலி ஊழல் தடுப்பு அதிகாரிகள் 3 பேர் கைது


அரசு அதிகாரியிடம் பணம் பறிக்க முயன்ற போலி ஊழல் தடுப்பு அதிகாரிகள் 3 பேர் கைது
x

ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என்று கூறி அரசு அதிகாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை கோலார் டவுன் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோலார் தங்கவயல்:

போலி அதிகாரிகள்

பெலகாவியை சேர்ந்த முரிகப்பா, ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவைச் சேர்ந்த ரஜினிகாந்த் மற்றும் மராட்டியத்தைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய 3 பேரும் கோலார் டவுனில் உள்ள திட்ட செயல் அனுமதி அதிகாரி நாராயணகவுடா என்பவரை தொடர்பு கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் 3 பேரையும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டனர்.

மேலும் உங்கள் மீது ஊழல் புகார் உள்ளது, உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க எங்களுக்கு பணம் கொடுக்கவேண்டும், இல்லையென்றால் உங்கள் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்துவோம் என்று கூறி மிரட்டி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரி நாராயணகவுடா, இதுகுறித்து கோலார் புறநகர் போலீசில் புகார் அளித்தார்.

கைது

அதன்பேரில் அரசு அதிகாரி நாராயணகவுடாவின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர் முரிகப்பா, ரஜினிகாந்த் மற்றும் ரமேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முரிகப்பா உள்ளிட்ட 3 பேரும் இதேபோல் பல அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள்.


Next Story