உடுப்பி மீன்பிடி துறைமுகத்தில் இரும்பு பொருட்களை திருடிய 5 பேர் கைது


உடுப்பி மீன்பிடி துறைமுகத்தில்  இரும்பு பொருட்களை திருடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:45 PM GMT)

உடுப்பி மீன்பிடி துறைமுகத்தில் ரூ. 21 லட்சம் இரும்பு பொருட்களை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

உடுப்பி=

உடுப்பி மீன்பிடி துறைமுகத்தில் ரூ. 21 லட்சம் இரும்பு பொருட்களை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மீன்பிடி துறைமுகம்

உடுப்பி மாவட்டம் காபு தாலுகா ஹெஜமாடிகோடியில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் படகில் மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். இந்தநிலையில், மீன்பிடிதுறைமுக பகுதியில் இரும்பு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த இரும்பு பொருட்களை கடந்த சில நாட்களாக திருடி செல்லும் சம்பவங்கள் நடந்து வந்தன.

இதனை மீனவர்கள் கண்காணித்து வந்தனர். இந்தநிலையில், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் படகில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது அந்தப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் 5 பேர் நின்றனர். அவர்களை மீனவர்கள் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்த நபர்கள் தப்பியோடினர். அவர்களை மீனவர்கள் துரத்தி சென்றனர்.

5 பேர் கைது

ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து படுபித்ரி போலீசில் மீனவர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இரும்பு பொருட்களை திருடி செல்லும் மர்மநபர்களையும் தேடி வந்தனர். இந்தநிலையில், இதுதொடர்பாக 4 பேரை படுபித்ரி போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவை சேர்ந்த முகமது ஆசிப், நிஜாமுதீன், ஆபிஷ், முகமது ஆசீர் ஆகிய 4 பேர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் திருடிய இரும்பு பொருட்களை ஹம்சா என்பவரிடம் விற்றுள்ளனர். இதுதொடர்பாக ஹம்சாவையும் போலீசார் கைது செய்தனர்.

சிறையில் அடைத்தனர்

இவர்கள் 5 பேரிடம் இருந்து ரூ. 21 லட்சம் மதிப்பிலான இரும்பு பொருட்கள், 2 கார்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் உடுப்பி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story