ரூ.50 லட்சம் கேட்டு மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் பீகார் பெண்கள் 2 பேர் கைது


ரூ.50 லட்சம் கேட்டு மாணவன் கடத்தப்பட்ட வழக்கில்  பீகார் பெண்கள் 2 பேர் கைது
x

பெங்களூருவில் ரூ.50 லட்சம் கேட்டு மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த பீகார் மாநில பெண்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

கடத்தப்பட்ட மாணவன் மீட்பு

பெங்களூரு ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உரமாவு பகுதியில் வசிப்பவர் சுபாஷ், அரசு பஸ் டிரைவர். இவருக்கு 11 வயதில் மகன் உள்ளான். இந்த சிறுவன் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில், கடந்த 7-ந் தேதி வீட்டு முன்பு நின்று விளையாடிய மாணவனை ஒரு பெண் கடத்தி சென்றிருந்தார். பின்னர் சுபாசை தொடர்பு கொண்டு பேசிய கடத்தல்காரர்கள், உங்களது மகனை கடத்தி வைத்துள்ளோம், அவனை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும் என கேட்டு மிரட்டினார்கள்.

இதுகுறித்து ஹெண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல்காரர்களிடம் இருந்து மாணவனை மீட்க நடவடிக்கை எடுத்தனர். அதே நேரத்தில் மாணவன் கடத்தப்பட்ட சில மணிநேரத்திலேயே, பெங்களூரு புறநகர் மாவட்டம் ஜிகினியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் வைத்து, அவனை போலீசார் மீட்டனர். அத்துடன் மாணவனை கடத்தியதாக நேபாள நாட்டை சேர்ந்த காவலாளியான கவுரவ் சிங் என்பவரை கைது செய்தனர்.

பீகார் பெண்கள் கைது

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கடத்தலில் மேலும் 2 பெண்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் அவர்கள் 2 பேரும் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தனர். இதையடுத்து, 2 பெண்களையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மாணவன் கடத்தல் வழக்கில் தொடர்புடைய 2 பெண்களை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த மங்கீதா மற்றும் துர்கா என்று தெரிந்தது.

இவர்களில் மங்கீதா, சுபாஷ் வீட்டின் அருகே வசித்து வந்துள்ளார். சுபாசிடம் ஏராளமான பணம் இருப்பதை அறிந்து கொண்ட அவர், கவுரவ் சிங் உதவியுடன் மாணவனை கடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக துர்காவுக்கு ரூ.10 லட்சம் தருவதாக கூறி, மாணவனை கடத்தி வரும்படி கூறியுள்ளனர். அதன்படி, துர்கா தான் மாணவனை கடத்தி சென்றது தெரியவந்தது. பணத்திற்கு ஆசைப்பட்டு மாணவனை கடத்தியதாக போலீசாரிடம் மங்கீதா கூறியுள்ளார். விசாரணைக்கு பின்பு மங்கீதா, துர்கா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.


Next Story