பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்


பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 18 Oct 2023 6:45 PM GMT (Updated: 18 Oct 2023 6:47 PM GMT)

பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கோவிந்தராஜநகர்:-

பெங்களூரு சுப்பண்ணா கார்டன் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அஸ்வினி பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் தனது மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்தார். இதனை கவனித்த அஸ்வினி மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அந்த வாலிபரிடம் மெதுவாக செல்லும்படி அறிவுரை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், அஸ்வினியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் அஸ்வினியின் ஸ்கூட்டர் மீது தனது மோட்டார் சைக்கிளை மோத விட்டார். இதனால் ஸ்கூட்டரில் இருந்து அஸ்வினி கீழே விழுந்து காயம் அடைந்தார். பின்னர் எனக்கு அறிவுரை எல்லாம் கூற வேண்டாம் என்று தகாத வார்த்தையில் சப்-இன்ஸ்பெக்டர் அஸ்வினியை மிரட்டிவிட்டு வாலிபர் சென்று விட்டார்.

இந்த சம்பவம் குறித்து கோவிந்தராஜநகர் போலீஸ் நிலையத்தில் அஸ்வினி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தேடிவந்தனர். இந்த நிலையில், அஸ்வினியை தாக்கியதாக பெங்களூரு மாலகாலாவை சேர்ந்த பரத் (வயது 32) என்பவரை கைது செய்துள்ளனர். இவர், சுத்திகரிப்பு குடிநீர் எந்திரம் விற்பனை நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்வது தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story