மாணவர் மீது தாக்குதல்: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் மீது வழக்கு

கல்லூரிக்கு ‘குல்லா’ அணிந்து வந்த மாணவர் மீது தாக்குதல் நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பாகல்கோட்டை:
'குல்லா' அணிந்து வந்த மாணவர்
பாகல்கோட்டை மாவட்டம் தெரதால் டவுனை சேர்ந்தவர் நவீத் ஹசன்சாப் தரதாரி (வயது 19). இவர் தெரதாலில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி நவீத் கல்லூரிக்கு 'குல்லா' அணிந்து வந்து உள்ளார். இதனை கவனித்த கல்லூரி முதல்வர், நவீத்திடம் 'குல்லா' அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், 'குல்லா'வை கழற்றிவிட்டு வகுப்புக்குள் செல்லும்படி கூறியுள்ளார்.
ஆனால் இதற்கு மறுத்த நவீத், கல்லூரிக்குள் 'குல்லா' அணிந்து செல்ல அரசு தடை விதிக்கவில்லை என்று கூறி கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்ததும் அங்கு வந்த தெரதால் போலீசார், நவீத்தை பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
7 பேர் மீது வழக்கு
இந்த நிலையில் தன் மீது நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து தெரதால் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர், 5 போலீஸ்காரர்கள், கல்லூரி முதல்வர் மீது நவீத் புகார் அளித்தார். ஆனால் புகாரை ஏற்றுக்கொள்ள போலீசார் மறுத்து விட்டனர். இதையடுத்து தன்னை தாக்கிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட கோரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நவீத் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை 3 மாதங்களாக நடந்து வந்தது. விசாரணை முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யும்படி தெரதால் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் மீது தெரதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.






