ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய குழு-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு


ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய குழு-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x

கர்நாடகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்வது தொடா்பாக ஒரு குழு அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

போராட்டம்

-கர்நாடகத்தில் ஒப்பந்த அடிப்படையில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் தங்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நீண்டகாலமாக முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந் தேதி முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.

பெங்களூருவில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் நகரில் குப்பை தேங்கி துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க முடிவு

கர்நாடகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் நீண்டகாலமாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அவர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து ஆராய தொழிலாளர்களின் தலைவர்கள், சபாய் கர்மசாரி நிகமா தலைவர் மற்றும் உறுப்பினர்கள், சமூக நலத்துறை அதிகாரிகள், சட்டத்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தற்போது தூய்மை பணியாளர்களுக்கு நேரடியாக சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் பிற பலன்கள் கிடைக்கவில்லை. தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் நாங்கள் எடுத்து உள்ள முடிவை போன்று வேறு எந்த மாநிலமும் எடுக்கவில்லை. நாங்கள் எடுத்து உள்ளது வரலாற்று சிறப்புமிக்க முடிவு. இந்த முடிவால் தூய்மை பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story