வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை


வரதட்சணை கொடுமையால்  தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

ஹாசனில், வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார். கொலை செய்ததாக போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

ஹாசன்:

வரதட்சணை கொடுமை

ஹாசன் டவுன் தொட்டமண்டிகனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மது என்ற மஞ்சுநாத். இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நேத்ராவதி (வயது 28). திருமணத்தின்போது நேத்ராவதியின் குடும்பத்தினர், மஞ்சுநாத்துக்கு பல லட்சம் ரொக்கம் மற்றும் 150 கிராம் நகைகளை வரதட்சணையாக கொடுத்து இருந்தனர். ஆனாலும் கடந்த சில மாதங்களாக மஞ்சுநாத், மனைவி நேத்ராவதியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மஞ்சுநாத் கிரிக்கெட் சூதாட்டத்திற்கு அடிமையாகி விளையாடி பணத்தை இழந்ததாக தெரிகிறது. இதனையறிந்த நேத்ரவாதி தட்டி கேட்டார். இதன்காரணமாகவும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் மனமுடைந்த நேத்ராவதி, நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதையறிந்த நேத்ராவதியின் பெற்றோர் ஓடிவந்து தூக்கில் தொங்கிய மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்த ஹாசன் டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது நேத்ராவதியின் பெற்றோர், போலீசில் எனது மகள் நேத்ராவதியை, அவளது கணவர் மஞ்சுநாத் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டுவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர்.

இந்த புகாரின் பேரில் ஹாசன் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story