நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைவு


நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால்  கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைவு
x

நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணரீ திறப்பு குறைந்துள்ளது.

மண்டியா:

கர்நாடகத்தில் கடந்த மாதம்(ஜூலை) தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து சற்று ஒய்ந்தது. இதையடுத்து மீண்டும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. தொடர் கனமழை, கேரளா வயநாடு உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி கடந்த 4 நாட்களாக இவ்விரு அணைகளில் இருந்தும் 1 லட்சத்திற்கும் மேலான தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. அதன்படி மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணைக்கு நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 69 ஆயிரத்து 953 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 63 ஆயிரத்து 921 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டு இருந்தது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட அணையில் 121.84 அடிக்கு தண்ணீர் இருந்தது.

இதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி தண்ணீர் கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 2,282.87 அடிக்கு தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரத்து 421 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 17 ஆயிரத்து 875 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இவ்விரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 81,796 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் திருமாகூடலுவில் ஒன்றாக சங்கமித்து அகன்ற காவிரியாக தமிழகம் செல்கிறது. கடந்த 4 நாட்களாக தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 1¼ லட்சத்துக்கும் மேல் தண்ணீர் சென்றநிலையில் நேற்று 1 லட்சத்திற்கும் கீழ் தண்ணீர் சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story