செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்: சிக்பள்ளாப்பூரில் பரபரப்பு


செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்:  சிக்பள்ளாப்பூரில் பரபரப்பு
x

நிலப்பிரச்சினையை தீர்த்து வைக்க கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சிக்பள்ளாப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோலார் தங்கவயல்:

விவசாயி

சிக்பள்ளாப்பூர் தாலுகா நல்லிகதிரேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மப்பா. விவசாயியான இவருக்கு சொந்தமான நிலம் குறித்த பிரச்சினையை சரிசெய்து கொடுக்கும்படி தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் வருவாய் துறை அதிகாரிகள் இவரது கோரிக்கையை ஏற்கவில்லை. இந்த நிலையில் நேற்று நரசிம்மப்பா சிக்பள்ளாப்பூர் டவுனில் உள்ள தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறினார்.

பின்னர் அவர் தனது பிரச்சினையை அதிகாரிகள் உடனே பேசி முடித்து தருமாறும், இல்லையேல் செல்போன் கோபுரத்தின் மேல் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறி மிரட்டல் விடுத்தார்.

பரபரப்பு

இதுபற்றி அறிந்த சிக்பள்ளாப்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நரசிம்மப்பாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் போலீசார், வருவாய் துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்து நரசிம்மப்பாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது நரசிம்மப்பாவின் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதையடுத்து அவர் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். இந்த சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story