உன்சூரில் வீட்டில் பதுக்கிய ரூ. 7 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்


உன்சூரில்  வீட்டில் பதுக்கிய ரூ. 7 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:46 PM GMT)

உன்சூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ. 7 லட்சம் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உன்சூர்-

உன்சூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ. 7 லட்சம் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தீபாவளி பண்டிகை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் வெளிமாநிலங்களில் இருந்து லாரி, சரக்கு வாகனங்களில் இருந்து கர்நாடகத்திற்கு பட்டாசுகள் கொண்டு வரப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு சிவகாசியில் இருந்து அதிகளவில் கர்நாடகத்திற்கு பட்டாசுகள் கொண்டு வரப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாசியில் இருந்து சரக்கு வாகனங்களில் பட்டாசுகளை ஏற்றி கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் அத்திப்பள்ளிக்கு வந்தது. அப்போது ஊழியர்கள் சரக்கு வாகனங்களில் இருந்து பட்டாசுகளை இறக்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் சரக்கு வாகனங்கள் முழுவதும் எரிந்து நாசமாகின.

16 பேர் உயிரிழப்பு

இந்த விபத்தில், இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து திருமணம், அரசியல் கட்சி விழா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வெடிக்க தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை மீறி வெடித்தால் சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சட்டவிரோதமாக குடோன்களில் யாரும் பட்டாசுகளை பதுக்கி வைத்து உள்ளார்களா? என மாநிலம் முழுவதும் போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இந்தநிலையில், மைசூரு மாவட்டம் உன்சூர் டவுன் மஞ்சுநாத் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் நாகராஜு. இவர் பட்டாசுகள் விற்பனை செய்து வருகிறார். .

பட்டாசுகள் பதுக்கல்

இந்தநிலையில், நாகராஜு வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக உன்சூர் டவுன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தர்மேந்திராவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அங்கு சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ரூ. 7 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உன்சூர் டவுன் போலீசார் நாகராஜு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story