பள்ளி மாணவ-மாணவிகள் செல்ல புதிய வழிப்பாதை அமைப்பு


பள்ளி மாணவ-மாணவிகள் செல்ல புதிய வழிப்பாதை அமைப்பு
x
தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:45 PM GMT)

சாம்பியன்-ஆண்டர்சன்பேட்டை இடையே பள்ளி மாணவ-மாணவிகள் செல்ல புதிய வழிப்பாதையை கவுன்சிலர் அமைத்து கொடுத்தார்.

கோலார் தங்கவயல்

கோலார் தங்கவயல் சாம்பியன் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆண்டர்சன்பேட்டையில் உள்ள தூய மரியன்னை பள்ளியில் படித்து வருகின்றனர். தினமும் இந்த பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் சாம்பியன் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 1½ கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது.

இதனால் சரியாக வகுப்பிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் 1½ கிலோ மீட்டர் தூரத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களால் பயணிக்க முடியாமல் போனது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

இந்தநிலையில் மாணவ-மாணவிகளின் பெற்றோர் குறுக்கு பாதைகள் அமைத்து கொடுக்கவேண்டும் என்று வார்டு கவுன்சிலர் மோனிஷா ரமேசிற்கு கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற மோனிஷா ரமேஷ் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அதன்படி சாம்பியன் பகுதியில் இருந்து ஆண்டர்சன்பேட்டை வரைக்கும் புதிய பாதை அமைத்து கொடுக்க முடிவு செய்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சாம்பியனில் இருந்து ஆண்டர்சன்பேட்டைக்கு செல்ல குறுக்குபாதை அமைத்து கொடுத்தார்.

அதாவது செடிகளாக காணப்பட்ட நிலத்தை பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைத்து பாதை அமைத்து கொடுத்துள்ளார். இதனால் மாணவ-மாணவிகள் அந்த பாதையை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

இதனால் 1½ மணி நேரம் செல்லவேண்டிய பாதையை, 20 நிமிடம் முதல் 30 நிமிடத்திற்கு கடந்து விடுவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகளின் பெற்றோர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கவுன்சிலர் மோனிஷா ரமேசிற்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.


Next Story