பிளக்ஸ், பேனர் வைப்போர் மீது கிரிமினல் வழக்கு: மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி


பிளக்ஸ், பேனர் வைப்போர் மீது கிரிமினல் வழக்கு:  மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி
x

பெங்களூருவில் பிளக்ஸ், பேனர் வைப்போர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூரு நகரின் அழகை கெடுக்கும் விதமாக பிளக்ஸ், பேனர்கள் வைப்பதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. எந்த ஒரு காரணத்தை கூறியும் பிளக்ஸ், பேனர்கள் வைப்பதற்கு அனுமதி கிடையாது. நகரில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ், பேனர்களை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்தும் ஏராளமான புகார்கள் வருகிறது. அந்த புகார்களின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

பெங்களூருவில் விதிமுறையை மீறி பிளக்ஸ், பேனர்கள் வைப்போர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் எந்த விதமான பாரபட்சமும் பார்க்கப்படாது. பிளக்ஸ், பேனர்கள் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சியின் 8 மண்டலங்களை சேர்ந்த இணை கமிஷனர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. நகரில் உள்ள சாலை பள்ளங்களை மூடும் பணிகள் நடந்து வருகிறது. சாலை பள்ளங்களை கண்காணித்து, அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story