மாட்டிறைச்சி விற்றவரின் வீட்டுக்கு மின் இணைப்பு துண்டிப்பு- சிக்கமகளூரு நகரசபை அதிரடி


மாட்டிறைச்சி விற்றவரின் வீட்டுக்கு மின் இணைப்பு துண்டிப்பு- சிக்கமகளூரு நகரசபை அதிரடி
x

உத்தரபிரதேசம் மாதிரியில், மாட்டிறைச்சி விற்றவரின் வீட்டுக்கு மின் இணைப்பு துண்டித்து சிக்கமகளூரு நகரசபை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சிக்கமகளூரு:

உ.பி. மாடல் ஆட்சி

உத்தரபிரதேசத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரின் வீடுகளில் மின் இணைப்பு, குடிநீர் துணைப்பு போன்ற நடவடிக்கைகளிலும், வன்முறையில் ஈடுபடுவோரின் வீடுகள் இடித்து அகற்றும் நடவடிக்கையிலும் அந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதுபோல் கர்நாடகத்திலும் வன்முறையில் ஈடுபடுவோர், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது யோகி மாடல் ஆட்சிப்படி கர்நாடகத்திலும் செயல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை எச்சரித்து உள்ளார்.

மாட்டிறைச்சி விற்றவர்

இந்த நிலையில் உ.பி. யோகி மாடல் ஆட்சி போல் சிக்கமகளூரு நகரசபை நிர்வாகமும் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்போர் மற்றும் சட்டவிரோதமாக மாடுகளை அடைத்துவைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிைலயில் சிக்கமகளூரு டவுன் தமிழ் காலனி பகுதியில் ஒரு வீட்டில் மாட்டிறைச்சி விற்பனை செய்வதாக நகரசபை மற்றும் டவுன் போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நகரசபை தலைவர் வேணுகோபால் தலைமையிலான அதிகாரிகள் போலீசாருடன் சென்று சந்தேகப்படும்படியான வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அதேப்பகுதியை சேர்ந்த சபியுல்லா என்பவர் வீட்டில் மாட்டிறைச்சி விற்று வந்தது தெரியவந்தது. முன்னதாக அதிகாரிகள், போலீசார் வருவதை அறிந்து சபியுல்லா தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து போலீசார், அங்கிருந்த சுமார் 100 கிலோ மாட்டிறைச்சியை பறிமுதல் செய்தனர்.

மின் இணைப்பு துண்டிப்பு

இதைதொடர்ந்து மெஸ்காம் ஊழியர்களை வரவழைத்து சபியுல்லாவின் வீட்டிற்கு மின் இணைப்பை துண்டித்துவிட்டு சென்றனர். இதுகுறித்து சிக்கமகளூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபியுல்லாவை வலைவீசி தேடிவருகின்றனர்.

சிக்கமகளூரு டவுனில், கடந்த மாதம் மாட்டிறைச்சி விற்ற கடைகள், கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. தற்போது மாட்டிறைச்சி விற்றவரின் வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story