சிவமொக்கா; ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சமூகநலத்துறை அதிகாரி கைது


சிவமொக்கா; ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சமூகநலத்துறை அதிகாரி கைது
x
தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:46 PM GMT)

சிவமொக்காவில் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சமூகநலத்துறை அதிகாரியை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா-

சிவமொக்காவில் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சமூகநலத்துறை அதிகாரியை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.

சமூகநலத்துறை அதிகாரி

சிவமொக்கா (மாவட்டம்) டவுனில் சமூகநலத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் துணை இயக்குனராக கோபிநாத் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், ராமினகொப்பா, புக்ளபுரா ஆகிய கிராமங்களில் மயானத்தை மேம்படுத்த பணிகள் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டது. இந்த பணிகளை ரவிக்குமார் என்பவர் டெண்டர் எடுத்து இருந்தார்.

இந்தநிலையில் மயான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ரூ.10 லட்சம் வழங்க அனுமதிக்கும்படி ரவிக்குமார் சமூகநலத்துறை அதிகாரி கோபிநாத்திடம் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அந்த விண்ணப்பத்தை கோபிநாத் கிடப்பில் போட்டுள்ளார். சில நாட்கள் கழித்து ரவிக்குமார் சமூகநலத்துைற அலுவலகத்திற்கு சென்று இதுகுறித்து கோபிநாத்திடம் கேட்டுள்ளார்.

ரூ. 15 ஆயிரம் லஞ்சம்

அதற்கு அவர் மயான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ரூ. 10 லட்சத்தை விடுவிக்க ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என ரவிக்குமாரிடம் கூறினார். இதனை கேட்ட ரவிக்குமார் அதிர்ச்சி அடைந்து வளா்ச்சி பணிகளை மேற்கொள்ள எதுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என கோபிநாத்திடம் கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

லஞ்சம் கொடுத்தால் மட்டுமே உனது வேலை நடைபெறும் என கோபிநாத் உறுதியாக கூறினார். இதையடுத்து ரவிக்குமார் அங்கிருந்து சென்றார். பின்னர் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டார். இதையடுத்து ரவிக்குமார் மனம் மாறினார். இதுகுறித்து அவர் லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். அவர்கள் சில அறிவுரைகளை கூறி ரசாயன பொடி தடவிய ரூ. 15 ஆயிரம் நோட்டுகளை ரவிக்குமாரிடம் அனுப்பி வைத்தனர்.

அதிகாரி கைது

இதையடுத்து, அவர் சமூகநலத்துறை அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் கோபிநாத்திடம், ரவிக்குமார் ரூ. 15 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லோக் அயுக்தா போலீசார் கோபிநாத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story