சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி - சதானந்தகவுடா குற்றச்சாட்டு


சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி -   சதானந்தகவுடா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 Oct 2023 6:45 PM GMT (Updated: 20 Oct 2023 6:46 PM GMT)

காங்கிரஸ் தலைமைக்கு பணம் கொடுப்பதில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி சதானந்தகவுடா குற்றம்சாட்டி உள்ளார்.

மல்லேசுவரம் -

காங்கிரஸ் தலைமைக்கு பணம் கொடுப்பதில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி சதானந்தகவுடா குற்றம்சாட்டி உள்ளார்.

கடும் போட்டி

பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் முதல்-மந்திரி சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் அரசு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கமிஷன் பெற்று, அதனை காங்கிரஸ் தலைமைக்கு வழங்கும் போஸ்டர்களை வெளியிட்டு முன்னாள் மத்திய மந்திரி சதானந்தகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த 5 மாதத்திலேயே ஊழல், ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் பெறுவதை மாநில மக்கள் நன்கு அறிந்து கொண்டுள்ளனர். கர்நாடக அரசை, காங்கிரஸ் தலைமை ஒரு ஏ.டி.எம். எந்திரமாகவே பயன்படுத்தி வருகிறது.

ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கமிஷன் பெறும் விவகாரத்திலும், அந்த பணத்தை காங்கிரஸ் தலைமைக்கு வழங்கவும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தி தான் கர்நாடக அரசிடம் இருந்து கமிஷன் பெறுவதில் முக்கிய நபராக இருக்கிறார்.

பொய் குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் வசூலிக்கும் கமிஷன் பணத்தை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவுக்கு வழங்கி வருகின்றனர். முதல்-மந்திரி சித்தராமையாவின் மகன் யதீந்திரா தான் வசூலிக்கும் பணத்தை ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவுக்கும், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், நேரடியாக கே.சி.வேணுகோபாலுக்கும் வழங்கி வருகின்றனர்.

டி.கே.சிவக்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை திட்டமிட்டு சி.பி.ஐ.க்கு பா.ஜனதா ஒப்படைக்கவில்லை. அதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதற்கான ஆதாரங்கள் இருந்த காரணத்தால் மட்டுமே சி.பி.ஐ. வசம் ஒப்படைத்திருந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story