கர்நாடகத்தில் மின் திருட்டை தடுக்க நடவடிக்கை-முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு


கர்நாடகத்தில் மின் திருட்டை தடுக்க நடவடிக்கை-முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு
x

கர்நாடகத்தில் மின் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:-

பிரச்சினை தீராது

கர்நாடகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மின்சாரத்துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் அந்த துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் சித்தராமையா பேசியதாவது:-

கர்நாடகத்தில் மழை பற்றாக்குறையால் மின் உற்பத்தி குறைந்துள்ளது. தற்போது கிடைக்கும் மின்சாரத்தை சரியான முறையில் வினியோகம் செய்ய வேண்டும். மின் நிர்வாகத்தை சரியான முறையில் நிர்வகித்து இருந்தால், விவசாயிகளுக்கு போதிய அளவில் மின்சாரம் வழங்கி இருக்க முடியும். அதிகாரிகள் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு இருந்தால் பிரச்சினை தீராது.

மின் திருட்டு

என்ஜினீயர்கள் களத்திற்கு சென்று விவசாயிகளுடன் கலந்துரையாட வேண்டும். அவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும். முந்தைய ஆட்சி காலத்தில் நல்ல மழை பெய்தும், மின் உற்பத்தியை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு வறட்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூற வேண்டும். மின் திருட்டை தடுக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?. மின் திருட்டை தடுக்க தீவிரமாக பணியாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

கூட்டத்தில் முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர் கோவிந்தராஜ், தலைமை செயலாளர் வந்திதா சர்மா, மின்துறை செயலாளர் கவுரவ் குப்தா, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் எல்.கே.அதீக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story