குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த வாலிபர் திடீர் சாவு


குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த வாலிபர் திடீர் சாவு
x

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது அண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு:

பெங்களூரு கோவிந்தபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் கபிலன்(வயது 35). இவரது அண்ணன் அசோகன். இந்த நிலையில் கபிலனுக்கும், அசோகனுக்கும் இடையே குடும்ப சொத்துகளை பிரிப்பது தொடர்பாக பிரச்சினை இருந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கபிலனும், அசோகனும் ஒரு மதுபான விடுதியில் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது குடிபோதையில் சகோதரர்கள் இடையே பிரச்சினை உண்டானது. அப்போது கபிலனை பிடித்து அசோகன் சாலையில் தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதில் கீழே விழுந்த கபிலன் மயங்கினார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கபிலனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக நிமான்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டார். கபிலனின் உடலில் எந்த காயமும் இல்லை. ஆனாலும் அவர் உயிரிழந்து இருப்பதால் கபிலனின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கபிலன் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். ஆனாலும் அசோகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story