மனைவி அடித்து கொலை


மனைவி அடித்து கொலை
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:46 PM GMT)

சாம்ராஜ்நகரில் பணத்தகராறில் மனைவி அடித்து கொலை தொழிலாளி கைது

கொள்ளேகால்:

சாம்ராஜ்நகரில் பணத்தகராறில் மனைவியை அடித்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

மனைவி அடித்து கொலை

சாம்ராஜ்நகர் மாவட்டம் மங்களஒசூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். கூலி தொழில் செய்து வந்தார். இவருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த ராதிகா (வயது 22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. தற்போது தம்பதிக்கு 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அக்கம் பக்கத்தினர் தலையிட்டு 2 பேரையும் சமாதானம் செய்து வைத்தனர். நேற்று காலை தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கோபம் அடைந்த கார்த்திக் பயங்கர ஆயுதங்களை கொண்டு ராதிகாவின் தலையில் தாக்கினார். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ராதிகா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொழிலாளி கைது

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ராதிகா இறந்து கிடந்ததை பார்த்து சாம்ராஜ்நகர் புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவன்-மனைவிக்கு இடையே பணத்தகராறு இருந்து வந்தது.

இதனால் ஏற்பட்ட தகராறில் கார்த்திக், ராதிகாவை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story