8 மாத குழந்தையுடன் பெண் தீக்குளித்து தற்கொலை


8 மாத குழந்தையுடன் பெண் தீக்குளித்து தற்கொலை
x

8 மாத குழந்தையுடன் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மைசூரு:

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா தாசனூரு கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவசாமி. இவருக்கும், சாம்ராஜ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிந்து(வயது 24) என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன்பிறகு 4 முறை கர்ப்பம் தரித்த சிந்துவுக்கு, அந்த கரு கலைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பிணியான சிந்துவுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 8 மாதம் ஆகிறது.

இந்த நிலையில் சிந்துவிடம், மகாதேவசாமியும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து மனரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், கூடுதல் வரதட்சணை கேட்டு அடித்து, உதைத்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிந்து, நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது குழந்தையுடன் தீக்குளித்தார். அவரையும், அவருடைய குழந்தையையும் அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிந்துவும், அவரது குழந்தையும் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் குறித்து தொட்டகல்வந்தே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story