காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Oct 2023 6:45 PM GMT (Updated: 20 Oct 2023 6:45 PM GMT)

பண்ட்வால் அருகே காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மங்களூரு-

பண்ட்வால் அருகே காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

எலெக்ட்ரீசியன்

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா கடேசிவாலாயா நெல்லிகுட்டே பகுதியை சேர்ந்தவர் சச்சின் (வயது25). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி சச்சின் வேலைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சச்சினை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் மகனை காணவில்லை என பெற்றோர் பண்ட்வால் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சினை தேடி வந்தனர். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் மாலை கமாஜே பகுதியில் வாலிபர் ஒருவர் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் பண்ட்வால் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பிரேத பரிசோதனைக்காக

அப்போது தூக்கில் பிணமாக தொங்கியது காணாமல் போன சச்சின் என போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சச்சினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ட்வால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அவரின் பேண்ட் பாக்கெட்டில் கடிதம் ஒன்று இருந்தது.

அதனை போலீசார் கைப்பற்றினர். அதில், என்னுடன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண்ணும், நானும் (சச்சின்) கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். தற்போது என்னை அந்த பெண் வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால் நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து பண்ட்வால் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story