பயணிகள் மறியல் போராட்டத்தால் கல்யாண்- சி.எஸ்.எம்.டி. இடையே ரெயில் சேவை பாதிப்பு


பயணிகள் மறியல் போராட்டத்தால் கல்யாண்- சி.எஸ்.எம்.டி. இடையே ரெயில் சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2023 7:00 PM GMT (Updated: 1 Oct 2023 7:00 PM GMT)

பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று காலை கல்யாண் - சி.எஸ்.எம்.டி. இடையே ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

மும்பை,

பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று காலை கல்யாண் - சி.எஸ்.எம்.டி. இடையே ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

பயணிகள் போராட்டம்

பன்வெல்- கலம்பொலி இடையே நேற்று முன்தினம் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. விபத்து காரணமாக அந்த வழியாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. அந்த வழியாக இயக்கப்பட இருந்த ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. அந்த வழியாக செல்ல இருந்த சி.எஸ்.எம்.டி. - மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலும் நேற்று காலை நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த ரெயிலை பன்வெல் வழியாக இல்லாமல் புனே வழியாக இயக்க ரெயில்வே அதிகாரிகள் திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. இதை கண்டித்து திடீரென திவா பகுதியில் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9.05 மணி முதல் நடந்த போராட்டத்தால் மத்திய ரெயில்வே மெயின் வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

ரெயில் சேவை பாதிப்பு

இந்தநிலையில் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி, எக்ஸ்பிரஸ் ரெயிலை பன்வெல் வழியாக இயக்குவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர். 45 நிமிடங்களுக்கு பிறகு, 10.50 மணியளவில் அந்த வழித்தடத்தில் மீண்டும் ரெயில்கள் இயக்கப்பட்டது. போராட்டம் காரணமாக கல்யாண்- சி.எஸ்.எம்.டி. இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.


Next Story