வசாய்- விரார் மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 பேரிடம் பணமோசடி; போலீஸ் விசாரணை


வசாய்- விரார் மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 பேரிடம் பணமோசடி; போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 16 Sep 2023 7:15 PM GMT (Updated: 16 Sep 2023 7:16 PM GMT)

மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 பேரிடம் பணமோசடி செய்த ஆசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

வசாய்,

தானே மாவட்டம் பயந்தரை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அந்த நபர் தனக்கு மாநகராட்சியில் உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும், இதனை வைத்து வேலை வாங்கி தர முடியும் என தெரிவித்தார். பின்னர் நாலாச்சோப்ராவில் உள்ள அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு பெண்ணிடம் தெரிவித்தார். மாநகராட்சியில் குமாஸ்தா ேவலை இருப்பதாகவும், இதற்காக ரூ.40 ஆயிரம் தருமாறும் தெரிவித்தார். இதன்படி அப்பெண் பணத்தை கொடுத்தார். 2 மாதம் கழித்து குமாஸ்தா வேலைக்கு ஆள் எடுத்து விட்டதாகவும், காசாளர் வேலை வாங்கி தருவதாக கூறி கூடுதலாக ரூ.10 ஆயிரம் தருமாறு தெரிவித்தார். இதனை நம்பிய அப்பெண் பணத்தை கொடுத்தார். சில நாட்கள் கழித்து பணிநியமன ஆணையை அப்பெண்ணிடம் கொடுத்து உள்ளார். இதனை பெற்ற அப்பெண் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று பணி நியமன ஆணையை கொடுத்தார். இதனை அதிகாரி சோதித்தபோது அது போலியானது என தெரியவந்தது. இதையெடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். புகாரின் படி போலீசார் ஆசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் இதே பாணியில் அவர் 30 பேரிடம் போலி பணி நியமன ஆணையை கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story