செம்பூரில் பயங்கரம்; தாய், மகளை கத்தியால் குத்திவிட்டு தொழிலாளி தற்கொலை - போலீசார் விசாரணை


செம்பூரில் பயங்கரம்; தாய், மகளை கத்தியால் குத்திவிட்டு தொழிலாளி தற்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Sep 2023 6:45 PM GMT (Updated: 22 Sep 2023 6:46 PM GMT)

செம்பூரில் தாய், மகளை கத்தியால் குத்திவிட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

செம்பூரில் தாய், மகளை கத்தியால் குத்திவிட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணுக்கு கத்திக்குத்து

மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராகுல் நிஷாத்(வயது30). இவர் அங்குள்ள மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் சாய்பாபா நகர் பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணின் வீட்டிற்கு உணவு சாப்பிட சென்று வந்தார். இதனால் அப்பெண்ணின் கணவரும் ராகுல் நிசாத்தை அறிந்து இருந்தார். இந்தநிலையில் கடந்த 20-ந் தேதி ராகுல் நிசாத் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று கதவை மூடினார். பின்னர் பெண்ணை பிடித்து சரமாரியாக கத்தியால் குத்தினார். இதனை கண்ட வீட்டில் இருந்த பெண்ணின் 15 வயது மகள் தடுக்க முயன்றார். ஆனால் அவர் சிறுமியையும் கத்தியால் குத்தினார்.

தொழிலாளி தற்கொலை

இந்த தாக்குதலில் தாய், மகள் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தனர். பின்னர் ராகுல் நிசாத் அதே கத்தியை கொண்டு தன்னை தானே குத்திக்கொண்டார். சுதாரித்து கொண்ட பெண் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தார். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராகுல் நிசாத் உயிரிழந்ததாகவும், தாய், மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story