தினம் ஒரு தகவல் : ‘எலிப்பொறி சுவர்’


தினம் ஒரு தகவல்  : ‘எலிப்பொறி  சுவர்’
x
தினத்தந்தி 27 Jan 2019 9:00 AM GMT (Updated: 26 Jan 2019 1:49 PM GMT)

கட்டிடங்களை கட்டுவதற்கு புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகின்றன.

ஏழைகளின் பெருந்தச்சன் என கேரள மக்களால் அன்புடன் அழைக்கப்படும் ஆங்கிலேயரான லாரி பேக்கர் வலியுறுத்திய எலிப்பொறி பாணியில் செங்கல் சுவர்களை அமைப்பது நமக்கு உகந்தது. 

எலிப்பொறி பாணியில் செங்கல்கள் நீளவாக்கிலும், அகல வாக்கிலும் வைக்கப்பட்டு சுவர் அமைக்கப்படும். இதனால் செங்கல் பயன்பாடும் குறையும். கட்டிடம் குளுமையாகவும் இருக்கும். வழக்கமாக, செங்கல்லை ஒன்றன்மீது ஒன்று அடுக்கிக் கட்டாமல் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது கட்டிடம் பசுமை கட்டிட வரிசைக்கு நகர முடியும்.

இந்தப் பாணியில் சுவரை அமைக்கும்போது சுவரின் பூச்சுக்கு சாந்தாக சிமெண்டை பயன்படுத்தாமல் சுண்ணாம்பைப் பயன்படுத்துவது நல்லது. இதனுடன் உலர் சாம்பலையும் சேர்த்து பயன்படுத்தலாம். சுண்ணாம்பு நாடு முழுவதும் பரவலாக கிடைக்கும் பொருள். மேலும் அதன் விலையும் குறைவே. எனவே சிமெண்டால் ஆகும் அதிக செலவை இது வெகுவாக குறைத்துவிடும். 

தொழிற்சாலை கழிவுப் பொருளான சாம்பலை பயன்படுத்துவதும் பசுமைக் கட்டிடத்தின் ஓர் அம்சமே. செங்கற்களிலும் மாற்று செங்கற்களை பயன்படுத்தலாம். ஏனெனில் வழக்கமான செங்கல்லின் உற்பத்தி முறை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும். செங்கல் சூளைகளில் செங்கல்லைச் சுடும்போது காற்று மாசுபடும். மாற்றுச் செங்கல்கள் வழக்கமான சூளை செங்கல்களை விட திடமான, நீண்ட நாள் உழைக்கும் சுவரை தரும்.

எலிப்பொறி தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் 20 முதல் 35 சதவீதம் அளவுக்கு செங்கல்களை சேமிக்கலாம். பூச்சுக் கலவையின் செலவும் 30 முதல் 50 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது. எனவே 9 அங்குல சுவரின் கட்டுமான செலவை 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்க முடியும்.

வழக்கமான கட்டுமானத்தில் ஒரு மீட்டர் சுவரை அமைக்க சூளைச் செங்கல்கள் 550 தேவைப்படும் என்றால் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் 450 செங்கற்களே போதும். எலிப்பொறி தொழில்நுட்பத்தை பயன்படுத்திச் சுவரை அமைக்கும்போது கட்டிடத்தின் உள்ளே வெயில் காலத்தில் குளுமையாகவும் குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும்.

இந்தச் சுவரை அப்படியே விட்டுவிடலாம். மேற்பூச்சோ, வண்ணப்பூச்சோ அவசியமல்ல. பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். இந்த கட்டுமான தொழில்நுட்பம் எடையும் தாங்கும். எனவே எடையை தாங்கக்கூடிய இடங்களிலும் இதைப் பயன்படுத்தலாம். அறைகளைப் பிரிக்கும் சுவர் எழுப்ப வேண்டிய இடங்களிலும் இந்தப் பாணி கை கொடுக்கும்.

எலிப்பொறி பாணியில் அமைந்த சுவர்கள் வழக்கமான சுவர்களைவிட 20 சதவீதம் குறைவான எடையையே பூமிக்கு கடத்தும். எனவே முறையாக இந்தச் சுவரை அமைக்கும்போது அஸ்திவாரச் செலவும் கொஞ்சம் குறையும். செலவைக் குறைக்கும் எலிப் பொறி தொழில்நுட்பத்தில் கட்டிடம் அமைத்தால் சுற்றுச்சூழலுக்கும் நல்லது; நமக்கும் நல்லது என்கிறார்கள் கட்டிடக்கலை நிபுணர்கள்.


Next Story