சரித்திரம் போற்றும் சத்ரபதி சிவாஜி...!


சரித்திரம் போற்றும் சத்ரபதி சிவாஜி...!
x
தினத்தந்தி 18 Feb 2019 8:01 AM GMT (Updated: 18 Feb 2019 8:01 AM GMT)

நாளை (பிப்ரவரி 19-ந் தேதி சத்ரபதி சிவாஜி பிறந்த நாள்.

அந்த பெண்ணின் வயது 18. அவளின் சிவந்த முகத்தில் விழிகள் நெருப்பு நிறமாய் தெரிந்தன. அவள் முகத்தில் பயம் அப்பி இருந்தது. “பயப்படாதே! நீ முகத்தை பர்தாவால் மூடிக்கொள்” என்று அந்த பெண்ணிடம் கூறினான் 19 வயது இளைஞன். அவன் மராட்டிய மாமன்னன் சிவாஜி. காடு, மலை, நதி கடந்து வந்த குதிரைகளும், சிப்பாய்களும் அங்கே நின்றனர். அந்த பெண்ணுடன் நின்ற பெரியவர் நடுங்கிக்கொண்டிருந்தார். “இவர் பேரழகிதான். என் அம்மாவும் அழகுதான். என் அம்மா ஒரு வேளை இந்த அழகை பெற்றிருந்தால் நான் மேலும் அழகாக இருந்திருப்பேன். பெரியவரே, நீங்கள் இந்த பெண்ணை அழைத்துப்போகலாம்” என கூறி அவர்களை விடுதலை செய்தான் சிவாஜி.

ஒரு படை எடுப்பில் கல்யாண் பகுதியை வென்ற வீரர்கள் சுபேதார் முல்லா முகமதுவையும், அவர் மருமகளையும் கைது செய்து சிவாஜி முன் நிறுத்தி இருந்தனர். உங்கள் மனைவி அல்லாதவளை நீங்கள் சகோதரியாகவோ, தாயாகவோ நினைக்க வேண்டும் என்பதே சிவாஜி திரும்ப திரும்ப சொன்னது ஆகும். சாவித்திரி தேசாய் என்ற மங்கை, தளபதி சுகுஜி கெய்க்வாட்டால் கதற கதற பாலியல் வன்முறை செய்யப்பட்டாள். கெய்க் வாட்டின் கண்கள் குருடாக்கப்பட்டு ஆயுள் முழுதும் சிறையில் அடைக்கப்பட்டான். பிறப்பால் சிவாஜி உழவர் குடும்பத்தைச் சேர்ந்தவர். உழைப்பாலும், போர்த்திறத்தாலும் முன்னேறிய சிவாஜிக்கு பேரரசன் பட்டாபிஷேகம் நடத்த உள்ளூர் வேதியர்கள் இசையவில்லை. காசியிலிருந்து ஏராளமான பொருள் செலவில் காகபட்டர் என்ற பண்டிதர் அழைத்து வரப்பட்டார். அவர் சிவாஜியை புனித நீராட்டி பூணூல் அணிவித்து சிவாஜியின் தாழ்நிலையை உயர்த்தினார்.

சிவாஜி விவசாயி என்பதால் 8 மாதம் வயலிலும், 4 மாதம் யுத்தத்திலும் நிற்கும் பகுதி நேர போர் வீரர்களை விவசாயிகளிடமிருந்து உருவாக்கினார். சிவாஜியின் வளர்ச்சி அவரின் போர்த்திறத்தால் மட்டுமல்ல, அவர் கையாண்ட தந்திரத்தாலும் ஏற்பட்டது ஆகும். வேவு பார்க்க ஒற்றர்களை பிச்சைக்காரர் வேடத்தில் அனுப்புதல், வீரர்களை புல் சுமப்பவர்களாக அனுப்புவது, புல்கட்டுகளில் பட்டாக்கத்தியை ஒளித்து வைப்பது, எதிரியானாலும், தம்பியானாலும் அவர்களுக்கு கடிதங்கள் அனுப்புவது என பல யுக்திகளை கடைபிடித்தார். தெற்கே விஜயபுரி ஆதிக்கம், வடக்கே மொகலாயர்கள், மற்றொரு பக்கம் கப்பல் படையுடன் அபிசீனியர்கள், வேறுபக்கம் போர்த்துக்கீசிய மற்றும் ஆங்கிலேய வீரர்கள் என அவர் சூழப்பட்டிருந்தார்.

கொரில்லா, போர்முறையை அறிமுகப்படுத்தியவர் சிவாஜி. இந்திய கப்பல் படையின் தந்தை என்றும் அழைக்கப்பட்டார். ஷாஜஹானோடு நட்பு இருந்தது. அவர் மகன் அவுரங்கசீப் சிவாஜியை முறியடிக்க நினைத்தார். சிவாஜி அவுரங்கசீப்புக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்பர் 52 ஆண்டுகள், ஜஹாங்கீர் 22 ஆண்டுகள், ஷாஜகான் 32 ஆண்டுகள் மத அரவணைப்போடு ஆட்சி நடத்தியதை கடிதத்தில் சிவாஜி நினைவு கூர்ந்தார். அவுரங்சீப்பின் வெறுப்பு அரசியலை மாற்றக் கோரினார். சிவாஜியை பொறுத்தவரை சமய சகிப்புத்தன்மையோடு விளங்கினார். “எல்லா மதங்களின் முடிவிலும் ஒன்றே ஒன்று புலப்படும். பள்ளி வாசல்களின் பிரார்த்தனை எல்லாம் ஒப்பற்ற ஒரு கடவுளையே சேரும்.... ஆலயங்களின் அபிஷேக ஆராதனை ஆனாலும் அக்கடவுளையே சேரும்...” என எழுதினார். சிவாஜியை பற்றி யதுநாதசர்க்கார் என்ற வரலாற்று அறிஞர் சிவாஜி ஈஸ்வர பக்தன் எனினும் சர்வமத சமரசன் என்று குறிப்பிட்டார். அவுரங்கசீப்பின் இறுதி காலத்தில் சிவாஜியோடு சமரசம் செய்தார். டெல்லி மீது ஈரானிய படை எடுப்பு நடந்த போது காட்சிகள் மாறின. மேலும் பீஜப்பூர், கோல்கொண்டா சுல்தான்களால் தான் தனக்கு அதிக பிரச்சினை என அவுரங்கசீப் நினைத்தார். மயிர் கூச்சொியும் வகையில் சிவாஜி பலமுறை உயிர் தப்பித்தார். அவுரங்கசீப் சிறையின் கடும் காவலிலிருந்து போர்வைக்குள் தலையணைகளை மறைத்து தந்திரமாக பழக்கூடை மூலம் தப்பினார்.

அப்சல்கான் என்பவன் சிவாஜியை கட்டிபிடிப்பது போல் கழுத்தை நெரித்தான். முன் எச்சரிக்கையாக இரும்பு கவசம் அணிந்து இருந்ததால் சிவாஜி தப்பினார். புலி நகம் கொண்டு அப்சல்கானை வீழ்த்தினார். சிவாஜியின் அரண்மனையை பூனாவில் ஷெயிஸ்டகான் என்ற அவுரங்கசீப்பின் தளபதி ஆக்கிரமித்திருந்தார். திருமண கோஷ்டியோடு சிவாஜி உள்ளே நுழைந்து 10 அடி உயர சுவரில் ஆள் மீது ஆள் ஏறி நிற்க வைத்து உள்ளே குதித்தார். சிவாஜியிடம் உயிர் பிச்சை கேட்டு அவன் பிழைத்தான். எதிரியின் படை பலமாக இருந்ததால் நவீன யுக்திகளை சிவாஜி கையாண்டார். சூரத் நகர் தாக்குதலில் 300 காட்டெருமைகள் கொம்பில் துணிப்பந்தலில் தீ வைத்து அனுப்பினார். தீ வட்டி ஊர்வலம் என எதிரிகளை ஏமாற்றி திசை திருப்பினார். சூரத்தில் இருந்த ஆங்கிலேய அதிகாரி கிழக்கிந்திய கம்பெனிக்கு கடிதம் எழுதினார். தென் இந்தியாவிலும் சிவாஜி வெற்றிகளை குவித்தார். வேலூர், ஆரணி, மகாராஜகடை, செஞ்சி, பெங்களூரு பகுதிகளை வென்றார். அவருக்கு கவலையை தந்தது, தம்பி ஏகோஜி என்ற வெங்காஜிதான். 1677 சூலையில் கொள்ளிடத்தின் வடகரையில் திருமழபாடியில் சிவாஜி தங்கினார். 2½ மாதம் தங்கிய அவர் தம்பிக்கு கடிதம் மூலம் புத்தி கூறினார். சிவாஜி தம்பிக்கு எழுதிய இரு கடிதங்கள் பூனா நகரில் உள்ள மராட்டிய வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ளன. எனினும் தன் மகன் சாம்பாஜியின் தூது காரணமாக சிவாஜி மராட்டியம் திரும்பினார். தாய் ஜீஜாபாயிடம் பாசம், பணிவு, குருபக்தி, நட்பு, நேசம், வீரம், வாள் பயிற்சி, குதிரை ஏற்றம் என அனைத்திலும் சிவாஜி தலைசிறந்து விளங்கினார். சரித்திரம் போற்றும் சிவாஜி மரணத்தின் போதும் 360 கோட்டைகள் அவரது கட்டுப்பாட்டில் இருந்தன. சிவாஜியின் வாழ்க்கை ஒரு சகாப்தம் ஆகும். 

- வெ.ஜீவக்குமார், தஞ்சாவூர்.

Next Story