மலையமான் கால கொற்றவை சொல்லும் செய்தி...!


மலையமான் கால கொற்றவை சொல்லும் செய்தி...!
x
தினத்தந்தி 18 April 2019 8:10 AM GMT (Updated: 18 April 2019 8:10 AM GMT)

சமீபத்தில் கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பெரியநெசலூர் என்ற கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டபோது ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மலையமான் கால கொற்றவையும் சில கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

 சங்ககாலத்தில் இருந்தே கொற்றவை வழிபாடு இருந்து வந்துள்ளது. அக்காலங்களில் தாய் வழி சமூக அமைப்பு செயல்பட்டதை கொற்றவை வழிபாட்டின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. சங்க இலக்கியங்களும், தொல்காப்பியமும் கொற்றவையைப்பற்றி சில குறிப்புகளை தருகின்றன. சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரிகளில் கொற்றவையின் உருவ அமைப்பு, ஆயுதங்கள், உடை, அணிகலன்கள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது. கொற்றவை பாலை நிலக்கடவுளாக அறியப்படுகிறார். காடுகளில் வசித்த வேட்டுவர்கள் தங்களது வேட்டையில் வெற்றி கிடைக்க கொற்றவையை வழிபட்டுள்ளனர்.

கொற்றவையானவர் பழையோள், பாய்கலைப்பாவை, ஐயை, பைந்தொடிப்பாவை, ஆய்கலைப்பாவை, சூலி, நீலி, காடுகிழாள் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். சிலப்பதிகாரத்தில் கொற்றவையின் கோவில் ஐயை கோட்டம் என அழைக்கப்பட்டுள்ளது. பல்லவர்கள் காலத்தில் கொற்றவை வழிபாடு மிகச்சிறப்பாக இருந்துள்ளது. பல்லவர்களின் கீழ் ஆட்சி செய்த வாணர்கள், மலையமான்கள் போன்றவர்கள் பல்லவர்கள் கலைப்பாணியை பின்பற்றி கொற்றவையின் தோற்றத்தை வடிவமைத்துள்ளனர்.

பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள மங்கமுத்தாயி அம்மன் கோவிலின் உள்ளே மேற்குப்புறத்தில் இந்த கொற்றவை தனி மேடையில் காட்சியளிக்கிறாள். ஆரம்ப காலத்தில் இது கருவறைக்குள் இருந்திருக்க கூடும். இக்கொற்றவை கி.பி 9-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். பல்லவர்கள் கலைப்பாணியை பின்பற்றி மலையமான்களால் செய்யப்பட்டுள்ளது. பல்லவர்கள் வலு இழந்த 9-ம் நூற்றாண்டில் மலையமான்கள் இப்பகுதியை ஆட்சி செய்ததை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இக்கொற்றவையின் உயரம் 102 செ.மீ, அகலம் 88 செ.மீ, தடிமன் 12 செ.மீ ஆகும். ஒரு பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. எருமைத்தலையின் மீது சம பங்க நிலையில் நின்றபடி உள்ளார். தலையில் கரண்ட மகுடம், காதுகளில் பத்தரகுண்டலம், கழுத்தில் சரபளி, சவடியுடன் புலிப்பல்லால் இணைக்கப்பட்ட தாலியை அணிந்துள்ளார். மார்புக்கச்சை பட்டையுடன் உள்ளது. மார்பில் சன்னவீரம் உள்ளது. இந்த சன்னவீரம் என்பது போர் கடவுள்கள், போர் வீரர்கள் மட்டும் அணியும் வீரச்சங்கிலியாகும்.

வலதுபுற மேல்பகுதியில் சூலமும் கிளியும், இடது புறம் கொற்றவையின் வாகனமுமான மானும் சிங்கமும் உள்ளது. மானும் சிங்கமும் அருகருகே ஒரே பக்கத்தில் காட்டப்பட்டிருப்பது தமிழகத்தில் இதுவே முதன்முறையாகும். எட்டுக்கரங்களுடன் உள்ளார் .வலது பின்புறகரங்களில் எறிநிலைச்சக்கரம், வாள், பாம்பு காணப்படுகிறது. கையில் பாம்புடன் ஒரு கொற்றவை கண்டறியப்படுவது தமிழகத்தில் இதுவே முதன் முறையாகும். முன்கரம் அபய முத்திரையில் உள்ளது. இடது பின் கரங்களில் சங்கு, வில், கேடயமும் முன்கரம் கடியஸ்த நிலையிலும் உள்ளது. யானைத் தோலை போர்த்தி இடுப்பில் புலித்தோலால் ஆன மேகலையை அணிந்துள்ளார். முழு ஆடை உள்ளது. இடப்புற காலில் சிலம்பும், வலப்புற காலில் கழலும் அணிந்துள்ளார். கொற்றவையின் காலுக்கு அருகே நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரன் உள்ளான். நவகண்டம் என்பது தன்னுடைய நாடு போரில் வெற்றி பெற ஒரு வீரன் தன் உடலில் உள்ள ஒன்பது பாகங்களின் சதையை அரிந்து கொற்றவைக்கு படையல் இட்டு தன் தலையை தானே வெட்டி பலி கொடுத்துக் கொள்வதாகும். இடப்புறம் கொற்றவையை வணங்கிய நிலையில் ஒரு அடியவர் உள்ளார்.

எருமைத்தலையின் வலதுபுறம் 6 வரிகளில் சிதைந்த நிலையில் ஒரு கல்வெட்டு உள்ளது. ஸ்ரீ முக்குல மலையமான் சாதன் என கல்வெட்டு வாசகம் உள்ளது. முக்குல மலையமான் வம்சத்தை நேர்ந்த சாதன் என்பவன் இந்த கொற்றவையை செய்து வைத்திருப்பதை இந்தக்கல்வெட்டு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மலையமான்கள் சங்ககாலத்தில் இருந்தே திருக்கோயிலூரை தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்து வந்துள்ளனர். சில காலம் சுதந்திரமாகவும் சிலகாலம் பல்லவர், சோழர், பாண்டியர்களின் கீழ் குறுநில மன்னர்களாகவும் ஆட்சி புரிந்து வந்துள்ளனர். பல்லவர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்தபோது அவர்கள் பாணியில் அமைந்த கொற்றவை இதுவாகும்.

மங்கமுத்தாயி அம்மன் கோவில் அருகே ஏரிக்கரையின் கீழ் ஓர் சிவன் கோவில் இருந்து அழிந்து போய் உள்ளது. ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் துண்டு கற்கள், தூண்களில் சில கல்வெட்டுகள் உள்ளன. ஒரு துண்டு கல்லில் திரிபுனசக்கரவத்திகள் மது கருவூரும் பாண்டியன் முடித்தலையும் குலோத்துங்க சோழ தேவற்கு என உள்ளது. இது சோழமன்னர் மூன்றாம் குலோத்துங்கசோழரின் மெய்கீர்த்தியாகும். இதன் மூலம் 12-ம் நூற்றாண்டில் இந்த ஊர் சோழர்களின் ஆட்சி நிலவியது உறுதியாகிறது. இங்குள்ள ஓர் உடைந்து போன தூணில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியரின் கல்வெட்டு 13 வரிகளில் காணப்படுகிறது. கல்வெட்டின் நடுவே பாண்டியரின் அரசுச்சின்னமான இரட்டை மீன் நடுவே செண்டு புடைப்பாக பொறிக்கப்பட்டுள்ளது. பாண்டியத்தேவர் என்பவர் தானமாக கொடுத்த திருநாமத்துகாணி நிலத்தை முதலீடாக கொண்டு ராசாக்கள் மண்டபம் என்ற ஒரு மண்டபத்தை கட்டிக்கொடுத்ததை இக்கல்வெட்டு சொல்கிறது. அந்த மண்டபம் தற்போது அங்கு இல்லை, முற்றிலுமாக அழிந்து விட்டது. இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம்.

- ஆறகழூர் பொன்.வெங்கடேசன் தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்.

Next Story