பிரபலமான, பாரம்பரியமான ‘வாத்து உணவகம்’


பிரபலமான, பாரம்பரியமான ‘வாத்து உணவகம்’
x
தினத்தந்தி 30 Nov 2019 3:24 PM IST (Updated: 30 Nov 2019 3:24 PM IST)
t-max-icont-min-icon

சீனாவிற்கு சுற்றுலா செல்பவர்கள், நிச்சயம் ஹாங்காங் பகுதியில் இருக்கும் ‘யூ கி ரோஸ்ட்’ உணவகத்தை ஆச்சரியத்தோடு கடந்து செல்கிறார்கள்.

சீனாவிற்கு சுற்றுலா செல்பவர்கள், நிச்சயம் ஹாங்காங் பகுதியில் இருக்கும் ‘யூ கி ரோஸ்ட்’ உணவகத்தை ஆச்சரியத்தோடு கடந்து செல்கிறார்கள். ஏனெனில் இந்த கடையை சுற்றி எப்போதுமே, ஒரு கூட்டம் நிற்கிறது.

கடை திறந்திருந்தாலும் சரி, மூடியிருந்தாலும் சரி உணவகத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களின் வரிசை மட்டும் குறைவதே இல்லை. எப்போதுமே இந்த கடை ‘ஹவுஸ்புல்’தான்.

இந்த கடையில் அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா..?, ‘வாத்து ரோஸ்ட்’ (கூஸ் ரோஸ்ட்) தான் இந்த உணவகத்தின் தனிசிறப்பு.

‘‘இந்த கடை 60 வருட பாரம்பரியம் கொண்டது. என் தந்தையின் முயற்சியில் இந்த உணவகம் உருவானது. ‘வாத்து ரோஸ்ட்’ உணவை ஹாங்காங் பகுதியில் முதன்முதலில் அறி முகப்படுத்தியதும் என் தந்தைதான்.

60 வருடங்களுக்கு முன்பு சீனாவின் மிக முக்கிய நகரங்களில் கூட வாத்து ரோஸ்ட் வெகு குறைவாகவே பரிமாறப்பட்டது. இதை உணர்ந்தபோதுதான், என் தந்தை அமெரிக்க சமையல் கலைஞர் ஒருவருடன் பழகி, வாத்து கறியை பிரமாதமாக சமைக்கும் வித்தையை கற்றுக்கொண்டார். அதற்குபிறகு சாலையோர கடை அமைத்து, வாத்து கறி பரிமாறப்பட்டது. படிப்படியாக வளர்ந்து, இன்று இரவு-பகல் பாராமல் இயங்கும் பிரபல உணவகமாக உயர்ந்திருக்கிறது’’ என்கிறார், இக்கால முதலாளி, ரெய்மண்ட்.

தந்தை உருவாக்கிய சிறு கடையை வெற்றிகரமான தொழிலாக மாற்றியவரும் இவரே. 50 ஆண்டு காலமாக வாத்து கறி சமைப்பதே, இவரது வாழ்க்கையாக கழிந்திருக்கிறது. சாலையோர சிறுகடை, எப்படி பிரபல உணவகமாக மாறியது என்பதை, ரெய்மண்ட் விளக்குகிறார்.

‘‘இன்றைய ‘யூ கி ரோஸ்ட்’ உணவகம் இருக்கும் இதே இடத்தில்தான் அப்பா ஆரம்பித்த, சாலையோர கடையும் இருந்தது. முதல் 10 ஆண்டுகள், லாபம் இல்லாத தொழிலாகவே இருந்தது. பிறகுதான் சமையல் ஸ்டைலை மாற்றினோம். அதுவரை சிறு துண்டுகளாக வெட்டி, சமைத்து பரிமாறிய உணவை, முழு உணவாக பரிமாற தொடங்கினோம். அதாவது, முழு கோழியை தந்தூரி மற்றும் கிரில் வகையில் சமைப்பது போல, வாத்தை முழுவதாக சமைக்க தொடங்கினோம். அதுவரை அமெரிக்கன் ஸ்டைலில் சமைக்கப்பட்டதை, நான் சீன ஸ்டைலுக்கு மாற்றி, இனிப்பு சுவையோடு சமைக்க ஆரம்பித்தேன். நினைத்ததைவிட, கூட்டம் அலைமோதியது. லாபம் பார்க்கும் விலையை நிர்ணயித்தும், மக்கள் கூட்டம் குறைந்ததாக இல்லை. அதனால் தவணை முறையில், ஒரு வாத்து பண்ணையை வாங்கினோம். அதில் நாங்களே வாத்தை வளர்த்து, அதையே கறியாக்கினோம். அப்படியே, ஹாங்காங் நகர அதிகாரி களின் ஒப்புதலோடு சாலையோர கடைகளை, மார்கெட் பகுதியாக மாற்றி, உணவகம் கட்ட தொடங்கினோம். ஒருவருடத்திற்குள் எல்லா வேலைகளும் முடிந்தது. சாலையோர கடையும், உணவகமாக மாறியது’’ என்பவர், சர்வதேச உணவு விமர்சகர் ஒருவர், உணவகத்தின் மதிப்பை உயர்த்தியதாகவும் கூறுகிறார்.

‘‘அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர், உணவகத்திற்கு வந்தார். ‘கூஸ் ரோஸ்ட்’ ஒன்று ஆர்டர் செய்தார். வழக்கம்போலவே உணவு பரிமாறினோம். ரசித்து ருசித்து சாப்பிட்டவர், என்னை தேடி வந்து, உணவு பக்குவத்தை கேட்க ஆரம்பித்தார். எப்படி சமைக்கிறீர்கள், இனிப்பு சுவையை கூட்டியது எப்படி?... என பல விஷயங்களை கேட்டறிந்து கொண்டு, என்னையும், உணவகத்தையும் புகைப்படம் எடுத்தார். அப்போதுதான் என் மகன் அவர் ஒரு விமர்சகராக இருக்கக் கூடும் என்றார். மகன் சொன்னதைபோலவே, அவரது பிளாக்கில் உணவகம் பற்றிய செய்தி வெளியானது. கூட்டமும், அலைமோத தொடங்கியது.

இன்று, ஒருநாளில் 500 முழு வாத்துகள் சமைக்கப்பட்டு, வாடிக்கையாளர்களால் ருசி பார்க்கப்படுகிறது. உணவகத்தை காலை 10 மணிக்குதான் திறப்போம். ஆனால் கூட்டம் காலை 8 மணிக்கே வரிசையில் நிற்க தொடங்கிவிடுகிறது. எவ்வளவு கூட்டம் வந்தாலும் சரி, ஒரு நாளில் 500 வாத்துகள் தான் சமைக்கப்படுகின்றன. அதற்கு மேல் சமைப்பது இல்லை. ஏனெனில், வாத்து கறியின் சுவைக்கு, வாத்துகளின் பராமரிப்பும், வயதும் முக்கிய காரணமாகின்றன. அதனால்தான் சொந்த பண்ணையில் வாத்துகளை, பதமாக வளர்க்கிறோம். வாத்துகள் பறக்க தொடங்கியதுமே, அவற்றை உணவாக்குகிறோம். அப்போதுதான் சுவையாக இருக்கும்’’ என்றார்.

ரெய்மண்ட்டிற்கு இப்போது 59 வயதாகிறது. இவருக்கு பிறகு இவரது மகன் ஜூனியர் ரெய்மண்ட் உணவக வியாபாரத்தை கவனிக்க இருக்கிறார். இதற்காக கடந்த 10 ஆண்டு களாக உணவகத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
1 More update

Next Story