சிட்டுக்குருவிகளுக்கு வாழ்வளிக்கும் தம்பதி


சிட்டுக்குருவிகளுக்கு வாழ்வளிக்கும் தம்பதி
x

சிட்டுக்குருவிகள் 13 ஆண்டுகள் வாழும். பாதுகாப்பான இடங்கள், வீடுகளில் கூடு கட்டி வசிக்கும் தன்மை கொண்டவை.

ழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்றான சிட்டுக்குருவி பற்றி, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கிராமங்களில் பிறந்தவர்களுக்கு நன்கு தெரியும். கிராமமோ, நகரமோ தங்களது வீடுகளில் 'கீச் கீச்' என்ற ஒலியுடன் பறந்து வரும் சிட்டுக்குருவிகளை பார்க்காமல் அவர்களது பொழுதுகள் விடிந்ததும் இல்லை, முடிந்ததும் இல்லை.

வீடுகளில் மாட்டி வைக்கப்பட்டு இருக்கும் போட்டோ, சாமி படம், நிலைப்படிகள் என்று கிடைத்த இடத்தை எல்லாம் சிட்டுக்குருவிகள் ஆக்கிரமித்து கூடு கட்டி வாழ்ந்த காலம் அது. காலை, மாலை பொழுதுகளில் அதன் 'கீச்சு கீச்சு' ஒலி ஏற்படுத்தும் ஏகாந்தத்தை வெறும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அவையெல்லாம் வெறும் கனவாகி போய்விட்ட நிலையில் தற்போது கிராமப்புறங்களில் கூட சிட்டுக்குருவிகளை பார்ப்பது அாிதிலும் அரிதாகவே உள்ளது.


விவசாயத்தால் நாம் பூச்சி மருந்துகளை பயன்படுத்துவது, வயல்வெளிகளை வீட்டுமனை ஆக்குவது என எல்லாம் சேர்ந்து மொத்தமாக சிட்டுக்குருவி இனம் அழிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு காணாமல் போன சிட்டுக்குருவிகளை மீட்டெடுக்க, கரூர் அருகே உள்ள செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்த ராஜசேகரன்-வனிதா தம்பதியினர் முயற்சி எடுத்திருக்கிறார்கள். இவர்களது வீட்டில், சிட்டுக்குருவிகள் தங்குவதற்கு என நூற்றுக்கும் மேற்பட்ட பானைகள் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் சிட்டுக்குருவிகள் தங்கி மகிழ்கின்றன.

இவர்களை பற்றிய செய்தி அறிந்ததும், அவர்களது வீட்டிற்குச் சென்று சந்தித்தோம். அப்போது சிட்டுக்குருவிகளின் இசை கச்சேரி போல, 'கீச் கீச்' ஒலி, நம் காதுகளை நிரப்பின. அந்த இசை கச்சேரிக்கு மத்தியில் அந்த தம்பதியினரிடம் பேசினோம். அவர்களில், ராஜசேகரன் நம்முடைய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

* என்ன படித்துள்ளீர்கள்?

நான் எம்.எஸ்.சி. பி.எட். படித்துள்ளேன். எனது மனைவி வனிதா பி.எஸ்.சி., பி.எட். படித்துள்ளார். இருவரும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறோம்.

* சிட்டுக்குருவி வளர்ப்பில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

கடந்த 2 ஆண்டுக்கு முன்பு எங்கள் வீட்டு சமையலறையில் உள்ள காற்றை வெளியேற்றும் பேன் துவாரத்தில் ஒரு சிட்டுக்குருவி கூடுகட்டி இருந்தது. அதைப் பார்த்ததும் நானும், எனது மனைவியும் குழந்தையை போல் குதூகலமாகி விட்டோம். அதற்கு தண்ணீர், உணவெல்லாம் கொடுத்தோம். அந்த உற்சாகம், சிட்டுக்குருவிகளை வளர்ப்பதில் ஆர்வத்தை உண்டாக்கியது. இதனையடுத்து அவைகளுக்கு தேவையான கூடுகள் மற்றும் மண்பானைகளை வைத்து குருவிகளுக்கு அடைக்கலம் கொடுத்தோம்.

* தற்போது எத்தனை சிட்டுக்குருவிகள் உள்ளன?

ஆரம்பத்தில் அதிகமாக குருவிகள் வரவில்லை. மண் பானைகள் மற்றும் கூடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினோம். அதற்கு தேவையான இரைகள், தண்ணீர் உள்ளிட்டவைகளை வைத்து வந்தோம். நாட்கள் செல்லச் செல்ல சிட்டுக்குருவிகள் அதிக அளவில் வந்து செல்ல ஆரம்பித்தன. தற்போது 400 குருவிகள் வரை வந்து செல்கின்றன.

* குருவிகளுக்கு தேவையான உணவுகள்?

குருவிகளுக்கு கம்பு, சோளம், அரிசி உள்ளிட்டவற்றை வைத்து வருகிறோம். மேலும் தண்ணீர் ஊற்றி வைப்பது வழக்கம். வாரம் ஒரு முறை அவற்றை சுத்தம் செய்து வைப்போம்.

* தீவன செலவு எவ்வளவு ஆகிறது?

மாதம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை செலவு ஆகிறது.

* பராமரிப்புக்கு என எவ்வளவு நேரம் ஒதுக்குவீர்கள்?

குருவிகள் பராமரிப்புக்கு என காலை மற்றும் மாலை வேளைகளில் சிறிது நேரம் ஒதுக்குவது உண்டு. இரை வைப்பது மற்றும் தண்ணீர் வைப்பது உள்ளிட்ட வேலைகளை செய்வோம்.

சிட்டுக்குருவிகள் 13 ஆண்டுகள் வாழும். பாதுகாப்பான இடங்கள், வீடுகளில் கூடு கட்டி வசிக்கும் தன்மை கொண்டவை.

மரத்தில் கூடு கட்டினால் பெரிய பறவைகளால் தொந்தரவுக்கு உள்ளாகும் காரணத்தால், வீடுகளில் கூடு கட்டி வாழ்கின்றன. முன்பு கூரை வீடு, ஓட்டு வீடுகளில் அதிகமாக வசித்து வந்த இந்த பறவைகள், கூரைகளின் இரு கட்டைகளுக்கு இடையே கூடு கட்டி வாழ்ந்தன. தற்போது கூரை வீடுகள் காணாமல் போன நிலையில் கான்கிரீட் வீடுகளிலும் கூடு கட்டி வசித்து வருகின்றன.

சிட்டுக்குருவியின் நீளம் 16 சென்டிமீட்டர் ஆகும். இதன் எடை 24 கிராம் முதல் 39.5 கிராம் வரை. அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் மார்ச் 20-ந்தேதி சிட்டுக்குருவிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

* குருவிகள் வளர்ப்பதால் அண்டை வீட்டினர் ஒத்துழைப்பு கிடைக்கிறதா?

குருவியால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. எனவே அண்டை வீட்டினர் இதற்கு உறுதுணையாகவே உள்ளனர்.

* குருவிகள் வளர்ப்பது சிரமமான செயல் என்று நினைத்தது உண்டா?

அவ்வாறு ஒருபோதும் நினைக்கவில்லை. குருவிகளின் 'கீச்சு கீச்சு' சத்தம் மனதிற்கு அமைதியை தருகிறது. அதுவே போதுமானதாக உள்ளது.

* வாடகை வீட்டில் குடி இருக்கும் நீங்கள் சொந்த வீட்டிற்குச் சென்றால் இன்னும் அதிக குருவிகள் வளர்ப்பீர்களா?

கண்டிப்பாக இன்னும் நிறைய குருவிகள் வளர்க்க வேண்டும். குருவிகளின் வாழ்விற்கு வழிவகுக்க வேண்டும். வருங்கால சந்ததிகள் குருவிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

* பறவைகள் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும். ஆனால் பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது என பறவைகள் வல்லுனர் சலீம் அலி குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்று நூற்றுக்கு நூறு உண்மை. அதனை நாங்கள் நேரடியாக பார்க்கிறோம்.

* சிட்டுக்குருவியை பாதுகாக்க வேறு என்ன செய்கிறீர்கள்?

அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த பறவை இனத்தை காக்க, நம்மால் ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பட்டாசுகள் வெடிப்பதை முடிந்தவரை தவிர்க்கிறோம். நம் வீட்டு பால்கனியில் மரம், மண்பானை, அட்டை பெட்டியில் செய்யப்பட்ட செயற்கை கூடுகள் அமைத்து அவற்றின் இனப்பெருக்கத்திற்கு உதவ வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அச்சடித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வழங்கி வருகிறேன்.

* குருவிகள் கூடு கட்டினால் தெய்வீக அருள் அதிகரிக்கும் எனக் கூறுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இருக்கலாம். சிலர் குருவிகள் கூடு கட்டினால் நல்ல சகுனம் என்று கூட கூறுவர். எது எப்படியோ காலை நேரத்தில் அவற்றின் கீச்சுகீச்சு சத்தம் மனதிற்கு உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளது.



Next Story