பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த பண்டமாற்றுமுறையை கடைப்பிடிக்கும் மாணவி


பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த பண்டமாற்றுமுறையை கடைப்பிடிக்கும் மாணவி
x

டெல்லியைச் சேர்ந்த 10 வயது பள்ளி மாணவி லிசி பிரியா கங்குஜம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை ஆர்வலராக இருக்கிறார். இந்தியாவில் ஒருமுறை பயன் படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவற்றை முழு வதுமாக அகற்றும் நோக்கத்துடன் டெல்லி பல்கலைக்கழகத்தில் உலகின் முதல் பிளாஸ்டிக் பணக்கடையை திறந்துள்ளார்.

* ஐந்தாம் வகுப்பு மாணவி

நொய்டாவில் உள்ள ரியான் இன்டர்நேஷனல் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார் லிசி பி்ரியா கங்குஜம். பூமியைகாப்பாற்றும் போராட்டங்களை முன் னெடுத்திருக்கும் இளம் தலைமுறை மாணவர்களில் இவரும் ஒருவர். தன் கடையில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு பதில் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான எழுதுபொருட்களை இலவசமாக வழங்குகிறார். தொற்றுநோய் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக மனதிலிருந்த புதுமையான முயற்சி பற்றிப் பேசிய லிசிபிரியா, "மக்கள் வீட்டிலிருந்து ஒரு முறை பயன்படுத்தும் எந்த பிளாஸ்டிக் கழிவையும் கொண்டு வரலாம். அதற்கு ஈடாக அரிசி, மரக்கன்றுகள், எழுதுபொருட்களை என் கடையில் இருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்" என்று விளக்கம் தருகிறார்.

* உலகுக்கு ஒரு செய்தி

"சுற்றுச்சூழல் சீரழிவு குறிப்பாக பிளாஸ்டிக் மாசுபாடு பற்றி ஒரு கடுமையான செய்தியை ஒட்டுமொத்த உலகத்திற்கும் அனுப்ப விரும்புகிறேன்" என்கிறார். பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கும் பிளாஸ்டிக்கை என்ன செய்வீர்கள் என்று லிசி பிரியாவிடம் கேட்டபோது, "ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழலுக்குத் தகுந்த சாலை ஓடுகள், கற்கள், பள்ளி மேஜைகள், கூரை ஷீட்டுகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.

ராஜஸ்தான், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் உள்ள யூனிட்களுக்கு சேகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அனுப்புகிறோம். அதில் தயாரிக்கப்படும் பொருட்கள் என் கடையில் விற்கப்படுகின்றன" என்றார்.

* தொடக்கம்

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான பிரசாரம் பெருங்கூட்டத்தை அடைய வேண்டும் என விரும்பினார் லிசிபிரியா. அதற்காக டெல்லி பல்கலைக்கழகத்தில் கடை வைக்க முடிவு செய்தார்.

"நான் டெல்லி பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால் நாம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட விரும்பினால், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஒன்றாக இருக்கும் இடத்தில் தொடங்க வேண்டும்" என்றார் லிசி பிரியா.


Next Story