உருமாறி மிரட்டும் கொரோனா 'ஓமைக்ரான் பி.எப்.7':மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அவசியமா? பொது சுகாதார இயக்குனர்- பொதுமக்கள் கருத்து

உருமாறி மிரட்டும் கொரோனா 'ஓமைக்ரான் பி.எப்.7' காரணமாக மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அவசியமா? என்பது பற்றி பொது சுகாதார இயக்குனர்- பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
கொரோனா நோய்க்கிருமி அழிவே இல்லை என்பது போல் உருமாறிப் பரவி உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.
உலகம் ஓலமிட்டது
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா நோய்த்தொற்று முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் அழையா விருந்தாளியாக அனைத்து நாடுகளிலும் ஊடுருவி சமூகப் பரவலாக மாறியது.
உலகமே ஓலமிட்டு அழும் வகையில் அந்தக் கொடிய நோய் தொற்றுக்கு சுமார் 45 லட்சம் பேர் உயிர் இழந்தனர்.
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டிலும் அதன் பீதி அனைவரையும் தொற்றி இருந்தது.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டன.
தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட உடன் கொரோனா தொற்று பரவலின் வேகத்துக்கும், வீரியத்துக்கும் முட்டுக்கட்டை விழுந்தது. அதனால் நோய் பற்றிய அச்சம் மக்கள் மனதில் மெல்ல, மெல்ல விலகியது. நாளடைவில் கொரோனா வைரசை சாதாரண காய்ச்சல் போன்று மக்கள் கருதத் தொடங்கினர். எனவே முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நடைமுறைகள் உதாசீனப்படுத்தப்பட்டன.
புது வடிவம்
கொரோனா கிருமி ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஓமைக்ரான் என புதுப்புது வடிவில் உருமாறி அச்சுறுத்தினாலும் மக்கள் கவலை கொள்வதாக இல்லை.
இந்த நிலையில் கொரோனா கிருமியை உலகிற்கு அறிமுகம் செய்த சீனாவில் 'ஓமைக்ரான் பி.எப்.7' என்ற வடிவில் கொரோனா புதிய உருவம் எடுத்துள்ளது. இந்த நோய்க்கிருமி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஊடுருவிவிட்டது.
வீரியமான கொரோனா தொற்று போன்று இந்தக் கிருமியும் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. உலக சுகாதார அமைப்பும் தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது.
அவசர ஆலோசனை
இந்த நிலையில் இந்தியாவில் ஓமைக்ரான் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
தமிழ்நாட்டிலும் இந்த நோய்க்கிருமி நுழைந்து விடாது தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள், கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது.
இதுபற்றிய மருத்துவ நிபுணர், பொதுமக்களின் பார்வை வருமாறு:-
மருத்துவ இயக்குனர்
தமிழக அரசின் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வ விநாயகம்:-
கொரோனா தொற்று பற்றி அச்சம் கொள்ளாமல் தைரியமாகவும், பாதுகாப்பாகவும் மக்கள் இருக்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஓமைக்ரான் பி.எப்.5 கிருமி பரவியது. அதனை நாம் எளிதில் கடந்து வந்துவிட்டோம்.
தற்போது ஓமைக்ரான் பி.எப்.7 கிருமி பரவுகிறது. இந்த வைரஸ் கிருமி பரவல் வேகம்தான் அதிகம் இருக்கிறது. பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் 96 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர். இதன்மூலம் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது.
இதனால் புதிய வகை கொரோனா பரவலை பற்றி யாரும் பயப்படத் தேவையில்லை.
அதே நேரத்தில் இன்னும் கொரோனா கிருமி முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பொது இடங்களுக்கு செல்வதை முதியோர்கள் முடிந்தளவு தவிர்க்க வேண்டும். அதேப்போன்று சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பண்டிகை காலங்கள் வருவதால் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது நல்லது.
முகக்கவசம் கொரோனா பரவலில் இருந்து மட்டுமல்ல காற்றில் பரவும் நோய்களில் இருந்தும் பாதுகாக்கும்.
முகக்கவசம் பாதுகாப்பானது
பாளையங்கோட்டையை சேர்ந்த அந்தோணி செல்வராஜ்:- கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க கட்டுப்பாடுகள் விதித்தால் பின்பற்றியே ஆக வேண்டும். முகக்கவசம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் பாதுகாப்பானது. காற்று மாசுபாட்டில் இருந்து நம்மை பாதுகாக்கவும், பிறரிடம் இருந்து நமக்கு தொற்று நோய் பரவாமல் தடுக்கவும், நம்மிடம் இருந்து பிறருக்கு பரவாமல் தடுக்கவும் முகக்கவசம் எப்போதும் அணிந்து கொள்ளலாம்.
நெல்லை பாலபாக்யாநகரை சேர்ந்த பழ வியாபாரி சந்தனம்:-
கொரோனா காலத்தில் முகக்கவசம் அணிந்திருந்தோம். அப்போது அலுவலகங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அடியோடு முடங்கிப் போனார்கள். அதன்மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவாமல் போனதால் முகக்கவசம் அணியாமல் சுதந்திரமாக இருக்கிறோம். மீண்டும் புதிய வகை கொரோனா பரவுவதாக கூறப்படுகிறது. அந்த வைரஸ் பரவாமல் தடுக்க மீண்டும் முகக்கவசம் அணிய உத்தரவிட்டால் அதை கடைப்பிடிப்போம். அரசு உத்தரவுகளை பின்பற்றி நோய் பரவாமல் தடுப்போம்.
கட்டுப்பாடுகள் தேவை
பாளையங்கோட்டையை சேர்ந்த ரமா பிரபா:-
நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா என்ற கொடிய நோய் மீண்டும் பரவினால் பொதுமக்கள் சிரமப்படுவார்கள். மக்களின் இயல்பு வாழக்கை பாதித்து விடும். எனவே, கொரோனா பரவினால் அதை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைதான்.
அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த கே.எஸ்.மணி:-
கொரோனா முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டோம். தற்போது முகக்கவசம் அணியாமல் உள்ளோம். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருந்தால் கொரோனா பரவாமல் தடுக்கலாம். கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்லும்போதும், வணிக வளாகங்கள், கடைகளில் மட்டும் முகக்கவசத்தை அணிந்து கொள்ளலாம். மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் தேவையற்றது. அந்த அளவுக்கு நோய் பரவாது என நினைக்கிறோம்.
முன்னெச்சரிக்கை அவசியம்
தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின்:-
புதிய வகை கொரோனா பாதிப்பு வடமாநிலங்களில் ஒன்றிரண்டு பேருக்கு ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே, பொதுமக்கள் முகக்கவசம் அணிவதுடன் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் தமிழக அரசின் தொற்று தடுப்பு நடவடிக்கைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், வயதான பெரியவர்கள், இணைநோய் உள்ளவர்கள் கவனமாகவும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். இருமல், காய்ச்சல் போன்ற நோய் அறிகுறி உள்ளவர்கள், குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து தற்போது வந்த பயணிகள் அரசு மருத்துவமனைகளை அணுகி ஆலோசனை பெற வேண்டும். புதிய வகை கொரோனா ஆபத்தானது. இதை சரியாக கண்டறியவது எளிதல்ல. ஏனென்றால், இருமல், காய்ச்சல் இருக்காது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மூட்டு வலி, தலைவலி, கழுத்து வலி, மேல் முதுகு வலி, நிமோனியா, பசியின்மை ஆகியவை காணப்படும். சில நேரங்களில் வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இருக்காது. எனவே, மிகவும் கவனமாக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தென்காசியை சேர்ந்த கார் டிரைவர் சுந்தர்:-
நான் பூஸ்டர் தடுப்பூசி வரை போட்டுக்கொண்டு உள்ளேன். அரசு மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தால் அதை கண்டிப்பாக கடைப்பிடிப்பேன். முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று கூறினால் அணிந்து கொள்வேன். எச்சரிக்கையாக இருப்பதில் தவறில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






