அடுத்தடுத்து கொரோனா அலைகள் ஏற்படும் - விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்


அடுத்தடுத்து கொரோனா அலைகள் ஏற்படும் - விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்
x
தினத்தந்தி 17 July 2022 10:25 AM GMT (Updated: 17 July 2022 10:31 AM GMT)

ஒமைக்ரான் பிஏ.4 மற்றும் பிஏ.5 மாறுபாடுகள் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஜெனிவா,

அடுத்தடுத்த கொரோனா அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "அடுத்த கொரோனா அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். புதிய மாறுபாடுகள் அதிகம் பரவக்கூடியதாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. ஒமைக்ரான் பிஏ.4 மற்றும் பிஏ.5 மாறுபாடுகள் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதனால் வரும் காலத்தில் ஏற்படும் கொரோனா அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அடுத்து வரும் ஒவ்வொரு அலையும் வேகமாகப் பரவக் கூடிய வகையிலும், தடுப்பூசியின் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தவிர்க்கக் கூடியதாகவும் இருக்கும்.

வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும்போது, மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே, அனைத்து நாடுகளும் கொரோனா பாதிப்பைப் பொறுத்து தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக உலக வங்கியின் மூத்த ஆலோசகர் பிலிப் ஷெல்கென்ஸ் கூறுகையில், "கொரோனா உயிரிழப்புகள் முறுபடியும் அதிகரித்து உள்ளது. பல மாதங்கள் தொடர்ந்து குறைந்து வந்த கொரோனா உயிரிழப்புகள் மீண்டும் உயரத் தொடங்கியது. ஒமைக்ரான் பிஏ.5 வகை வைரஸ், கொரோனா கட்டுப்பாட்டில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள், தடுப்பூசி பணிகள் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

பின்தங்கிய நாடுகள் மட்டுமில்லாமல் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிலும் கூட வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகியவை உயர் வருமானம் கொண்ட நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதேபோல பிரேசில் போன்ற வளரும் நாடுகளில் கொரோனா பாதிப்பு உயரத் தொடங்கி உள்ளது. அதேபோல பல நாடுகளிலும் உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரிக்கிறது" என்றார்.

மேலும், இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், "பிஏ.4 மற்றும் பிஏ.5 வகை கொரோனா, உலகின் பல நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வகை ஒமைக்ரான் காரணமாக அதிகம் பேருக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் சூழல் உருவாகிறது. இதனால் உயிரிழப்புகளும் கூட அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, நாம் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும்" என்றார்.


Next Story