மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது - பாரத் பயோடெக் நிறுவனம்


மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது - பாரத் பயோடெக் நிறுவனம்
x

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு பதிலாக இந்த மூக்கு வழி செலுத்திக்கொள்ளும் மருந்தை உபயோகப்படுத்தலாம்.

ஐதராபாத்,

கொரோனா வைரசுக்கு எதிரான பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து, கொரோனா தடுப்பூசியை போலவே மனிதர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் என்பது பரிசோதைனையில் தெரியவந்துள்ளது.

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. பிபிவி154 எனும் பெயர் கொண்ட இந்த மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு பதிலாக இந்த மூக்கு வழி செலுத்திக்கொள்ளும் மருந்தை உபயோகப்படுத்தலாம். இதற்கான மூன்றாம் கட்ட பரிசோதனை வெற்றியை தந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, மக்கள் பயன்பாட்டுக்காக அனுமதி கோரி அரசிடம் பரிசோதனை முடிவுகளின் தரவுகள் அனுப்பப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் டோஸ் தடுப்பூசியாக இந்த மருந்தை எடுத்துக் கொண்டவர்களுக்கும், பூஸ்டர் டோஸாக இந்த மருந்தை போட்டுக்கொண்டவர்களும் தடுப்பூசி தரும் அதே அளவு நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரொனாவுக்கு எதிரான பாதுகாப்பு உடலில் உண்டாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூக்கு வழி செலுத்திக்கொள்ளும் இந்த மருந்து செலவு குறைந்ததாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதால், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் பயனுள்ளதாக இருக்கும் என்று பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.

பிபிவி154 என்ற இந்த மருந்து 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்துக்கொள்ளலாம். மேலும், எளிதாக சேமித்து வைத்துக்கொள்ளலாம், பல பகுதிகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்கவும் எளிமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் செயின்ட் லூசியாவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த மருத்துக்கு தேவையான ஆதரவை மத்திய உயிர் தொழில்நுட்பத்துறையும், அதனுடைய நிறுவனமான உயிர்தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சிக் கவுன்சிலும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story