தேசிய அளவில் கவனம் பெறும் நிதிஷ் குமாரின் டெல்லி பயணம்.. 2024- தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் போடப்படுகிறதா?


தேசிய அளவில் கவனம் பெறும் நிதிஷ் குமாரின் டெல்லி பயணம்.. 2024- தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம்  போடப்படுகிறதா?
x

நிதிஷ்குமாரின் 3 நாள் டெல்லி பயணத்தின்போது, பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதுடெல்லி,

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சியாக இருந்த ஐக்கிய ஜனதாதளம் சமீபத்தில் கூட்டணியை விட்டு வெளியேறியது. இந்த கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார், ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து புதிய அரசை அமைத்தார்.

பா.ஜனதாவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அவர், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கப்போவதாகவும் அறிவித்தார். இதற்கான பணிகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, மணிப்பூரில் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த 6 எம்.எல்.ஏ.க்களில் 5 பேர் பா.ஜனதாவில் இணைந்து விட்டனர். தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா அபகரித்திருப்பது நிதிஷ்குமாருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜனதாவை கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், 'மற்ற மாநிலங்களில் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா எந்த பதவியும் வழங்கவில்லை. இதனால் அவர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்' என தெரிவித்தார்.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் இது ஒரு முற்றிலும் வேறுபட்ட புதிய கலாசாரமாக இருப்பதாகவும், அரசியல் சாசனத்துக்கு எதிரான இந்த நடவடிக்கை பா.ஜனதாவின் குணத்தை காட்டுவதாகவும் கூறினார்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் சிறப்பாக இருக்கும் என கூறிய நிதிஷ்குமார், 5-ந் தேதி (நாளை) டெல்லி செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

நிதிஷ்குமாரின் 3 நாள் டெல்லி பயணத்தின்போது, பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல், டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் சந்தித்து பா.ஜனதாவுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையே ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதன் தொடர்சியாக தேசிய கவுன்சில் கூட்டம் இன்றும் நடைபெறுகிறது.2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் வியூகங்களை வகுப்பது குறித்து இந்த கூட்டங்களில் விவாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

முன்னதாக நேற்று ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நிதிஷ்குமார் உரையாற்றினார். அப்போது அவர் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால், பா.ஜனதா வெற்றிபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை 50-ஐ கூட தாண்டாது. தேர்தல் ஆதாயங்களுக்காக நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பா.ஜனதா முயற்சிக்கும். அவர்களின் மோசமான திட்டத்தை முறியடிக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது' என்று தெரிவித்தார்.

தங்கள் (ஐக்கிய ஜனதாதளம்) ஓட்டுவங்கி நிலையாக இருப்பதாக கூறிய நிதிஷ்குமார், பா.ஜனதாவின் சதியால்தான் கடந்த 2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் கட்சிக்கு குறைவான இடங்கள் கிடைத்ததாகவும் குற்றம் சாட்டினார்.


Next Story