ஜி.டி. நாயுடு: அரிய கண்டுபிடிப்புகளில் அதிசயம் நிகழ்த்தியவர்..!


ஜி.டி. நாயுடு: அரிய கண்டுபிடிப்புகளில் அதிசயம் நிகழ்த்தியவர்..!
x

ஜி.டி. நாயுடு என்ற பெயரை தற்போதைய தலைமுறையினரும் அறிந்து வைத்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் தமிழகம் தந்த அறிவியல் மாமேதையாக திகழ்ந்து வருகிறார்.

எந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்து அரிய பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி அதிசயத்தை நிகழ்த்தி கோவைக்கு பெருமை தேடித்தந்தவர்.

இவர் கோவையை அடுத்த சூலூர் அருகே கலங்கல் என்ற இடத்தில் கடந்த 1893-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந் தேதி விவசாய குடும்பத்தில் பிறந்தார். அவருடைய இயற்பெயர் துரைசாமி நாயுடு. தந்தை பெயருடன் சேர்த்து கோபால்சாமி துரைசாமி என்பதைத்தான் சுருக்கமாக ஜி.டி.நாயுடு என்று அன்பாக அழைக்கப்பட்டார். இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டமில்லாதவராக இருந்த அவர் 4-ம் வகுப்பு வரை மட்டுமே பயின்றார். ஆனால் அவரின் அறிவு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு திறன் மற்றும் செயலாற்றல் திறன் பல ஆசிரியர்களுக்கு சமமாக இருந்தது.

ஆரம்பத்தில் அவர் தனது மாமாவின் தோட்டத்தில் வேலைக்கு சென்றார். அப்போது ஒருநாள் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் அந்த காலத்து மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக சென்றார். அந்த பிரமாண்டமான மோட்டார் சைக்கிளை ஜி.டி.நாயுடு வியந்து பார்த்தார். அந்த மோட்டார் சைக்கிள் பழுதானது. அதனை ஆங்கிலேய அதிகாரி ரிப்பேர் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அங்கு சென்ற ஜி.டி.நாயுடு ஆங்கிலேய அதிகாரிக்கு கழிவு துணி மற்றும் மண்எண்ணெய் கொடுத்து உதவினார். இதனால் ஆங்கிலேய அதிகாரி அவரை வெகுவாக பாராட்டினார். அந்த மோட்டார் சைக்கிளை எப்படியாவது நாம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. இதையடுத்து அவர் தோட்ட வேலையில் இருந்து விலகி ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அதில் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு ஆங்கிலேய அதிகாரியை சந்தித்து அந்த மோட்டார் சைக்கிளை வாங்கினாா். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை அவர் அக்கு வேறு, ஆணி வேராக பிரித்தார். அங்குதான் அவருக்கு ஆட்டோ மொபைல் பற்றிய ஆர்வம் தொடங்கியது. பின்னர் அவர் பருத்தி தொழிற்சாலையில் பணிபுரிந்தார். திருப்பூரில் ஒரு பருத்தி தொழிற்சாலையை நிறுவினார். மும்பையிலும் தன்னுடைய பருத்தி தொழிலை விரிவுபடுத்தினார். ஆனால் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஆங்கிலேயரான ஸ்டேன்ஸ் துரை என்பவரிடம் வேலைக்கு சேர்ந்தார். அதில் ஒரு பஸ்சை கடனாக பெற்று முதலாளியாக மட்டுமல்லாமல் தொழிலாளியாகவும் செயல்பட்டு பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு பஸ்சை இயக்கினார். பின்னர் யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி முதல் முறையாக பஸ் நிறுத்தத்துக்கு பஸ் வரும் நேரத்தையும், புறப்படும் நேரத்தையும் காட்டும் கருவியை கண்டுபிடித்தார். குறைந்த விலை காரை தயாரித்தார். அந்த காலத்திலேயே பயணச்சீட்டு வழங்குவதற்கான ஒரு எந்திரத்தையும் கண்டுபிடித்து தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார். அப்போதெல்லாம் என்ஜின் சூடாகாமல் இருக்க ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றவேண்டும், மோட்டார் ரேடியேட்டருக்கு இணையாக ஒரு எந்திரத்தை கண்டுபிடித்து அந்த பிரச்சினைக்கும் தீர்வு கண்டார்.

முன்காலத்தில் புகைப்படத்துறையில் மிகவும் உதவிகரமாக இருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்ட்டர் என்ற புகைப்பட கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்கும் கருவி, எந்தவிதமான வெட்டுக்காயமும் இன்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு என இவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன. இவர் கண்டுபிடித்த பிளேடை தானே தயாரித்துக்கொள்ள விரும்பிய ஒரு அமெரிக்க நிறுவனம் அதன் காப்புரிமையை வாங்க விலை பேசியது. தாய் நாட்டிற்கே தன்னுடைய கண்டுபிடிப்புகள் பயன்படவேண்டும் என்று எண்ணிய அவர், தமிழ் நாட்டிலேயே அதை தயாரிக்க முடிவெடுத்து நார்வே நாட்டிலிருந்து அதன் மூலப்பொருளை இறக்குமதி செய்ய விரும்பினார். அந்த முயற்சிகள் கை கூடாமல் போகவே காப்புரிமையும் கை நழுவிப்போனது. இவருக்கு ஆறுதலாக ஜெர்மனியில் நடைபெற்ற பொருட்காட்சியில் இவருடைய கண்டுபிடிப்பான சவரக்கத்திக்கு முதல் பரிசும், பிளேடுக்கு 3-ம் பரிசும் கிடைத்தது.

பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெற விரும்பியும் தர மறுத்தார் ஜி.டி.நாயுடு. என்னுடைய கண்டுபிடிப்புகள் அனைத்துமே நம் தேசத்திற்குதான் பயன்பட வேண்டும், அதனால்தான் காப்புரிமை கோராமல் வைத்திருக்கிறேன். இந்தியர் யாராக இருந்தாலும் அதை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்தார்.

அரியவகை கருவிகள் மட்டுமின்றி விவசாயத்திலும் கால்பதித்த அவர் சோள செடிக்கு மருந்து மூலம் குறுகிய காலத்திலேயே 26 கிளைகளுடன் பதினெட்டரை அடி உயரத்திற்கு வளரச்செய்தார். சாதாரண சோள செடியில் 3 அல்லது 4 கதிர்கள்தான் இருந்தன. ஆனால் இவருடைய கண்டுபிடிப்பில் உருவான செடிகளில் 39 கதிர்கள் வரை உருவாகின. தொடர்ந்து பருத்திசெடி, துவரை செடி என அவருடைய ஆராய்ச்சிகள் தொடர்ந்தன.

ஜெர்மானியர்கள் அவருடைய அதிசய பருத்தி செடிக்கு 'நாயுடு காட்டன்' என்று பெயரிட்டு கவுரவித்தனர். மேலும் இவர் சித்த வைத்தியத்திலும் சிறந்து விளங்கினார். ஒருநாள் ஆங்கிலேயர்கள் வீதியில் போட்டுச்சென்ற வலி நிவாரணி பாட்டிலை எடுத்து பார்த்தார். அதை எடுத்து அதுபோன்று வலி நிவாரணி மருந்து தயாரித்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்தார். சலவை செய்யும் எந்திரம், காபி தயாரிக்கும் கருவி, சப்பாத்தி, பூந்தி தயாரிக்கும் கருவி, உருளைக்கிழங்கு தோல் உறிக்கும் கருவி, சாவி கொடுக்கும் சுவர் கடிகாரம், ரேடியோ கிராம், தமிழ் டயல் ரேடியோ, எலெக்ட்ரிக் மோட்டார், கால்குலேட்டர் என அவர் கண்டுபிடிப்புகளை வரிசைப்படுத்திக்கொண்டே செல்லலாம்.

தன்னுடைய சுய முயற்சியினால் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை தொடங்கினார். இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்திசெய்யும் தொழிற்சாலை கோவையில் அமைந்ததற்கான பெருமை அவரை சேரும். அவருடைய திறமைகளுக்கு அங்கீகாரமும், ஆதரவும் கிடைத்திருந்தால் 'இந்தியாவின் எடிசன்' என்று அழைக்கப்பட்டவர், உலகம் முழுவதும் எடிசனுக்கு நிகராக போற்றப்பட்டிருப்பார். இருந்தபோதிலும் இவருடைய வாழ்க்கை வரலாறு இப்போதும் இந்திய இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.

ஜி.டி.நாயுடு 1974-ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி காலமானார். கோவை அவினாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி மற்றும் அருங்காட்சியகம் இவரது அறிவாற்றலை தற்போதும் பறைசாற்றுகிறது. இங்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் கூட தினமும் ஏராளமானவர்கள் வந்து அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.

முன்காலத்தில் புகைப்படத்துறையில் மிகவும் உதவிகரமாக இருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்ட்டர் என்ற புகைப்பட கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்கும் கருவி, எந்தவிதமான வெட்டுக்காயமும் இன்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு என இவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

1 More update

Next Story