மரம் வளர்ப்போம்... மழை பெறுவோம்...


மரம் வளர்ப்போம்... மழை பெறுவோம்...
x

இன்றைய காலக்கட்டத்தில் மரங்களின் தேவை இன்றியமையாதது. மரங்கள் இருந்தால் தான் மழை பொழியும். இயற்கையை பாதுகாக்க மரங்களை வளர்க்க வேண்டும்.

காற்று மாசு, நீர் நிலைகளில் மாசு என இந்த பூமியே மாசடைந்த பூமியாக மாறி வருகிறது. இதை தடுக்க இருக்கும் மரங்களை வெட்டாமல் இருப்பதுடன், புதிய மரங்களையும் வளர்க்க வேண்டும். வனப்பகுதியின் பரப்பளவை அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், இயற்கையுடன் ஒன்றி வாழ பழகுவது அவசியம்.

வனப்பகுதியில் உள்ள மரங்களை 4 பிரிவுகளாக பிரித்து வளர்க்கலாம்.

அதில் யூகலிப்டஸ், வறட்சியை தாங்கி வளரக்கூடியது. 4-6 ஆண்டுகளில் பெரியமரமாகி விடும். சவுக்கிற்கு பாசன வசதி அவசியம் தேவை. 4 ஆண்டுகளில் தயாராகி விடும்.

நெலரை, மலை வேம்பு, குமுள், பென்சில், தடசு, பீநாரி ஆகிய மரங்கள் வேகமாக வளரும். குறைந்தபட்சம் 6 அடி வரை வளரும். பாசன வசதி குறைந்தால் வளர்ச்சி பாதிக்கும். 8-10 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். மஹாகனி, காயா, சந்தன வேம்பு, பூவரசு, தாண்டி, வாகை போன்றவை நடுத்தரமான வேகத்துடன் வளரும் மரங்களாகும். அடிக்கடி மழைப்பொழிவுள்ள இடத்திலும், பாசன வசதியுள்ள இடத்திலும் நன்றாக வளரக்கூடியது. தேக்கு, ட்ரூ மஹாகனி, செஞ்சந்தனம், மஞ்சக்கடம்பு, கருங்காலி, வேங்கை போன்றவை மெதுவான வளர்ச்சியுடைய மரங்களாகும். குறைந்தபட்சம் 3 அடி ஆழமுள்ள மண்ணாவது வேண்டும். பாசன வசதி இல்லாவிட்டாலும் வளமான காட்டு மண்ணில் மழைப்பொழிவிலேயே நன்றாக வளரும். வேகமாக வளர்கின்ற மரங்களுக்கு ஆழமான மண் கண்டமும், ஈரப்பதமான மண்ணும் அவசியம்.

மெதுவாக வளர்கின்ற மரங்கள் ஆழம் குறைந்த மண்ணிலும் தாக்குப்பிடித்து வளர்ந்து விடுகின்றன. அதிகப்படியான வன மரங்கள் அமில மண்ணில் நன்றாக வளர்கின்றன. அவை 'பி.எச்.' அதிகம் உள்ள கார நிலை மண்ணில் சரியாக வளர்வதில்லை. நாவல், புங்கம், வேம்பு ஆகியவை கார நிலை மண்ணிலும் தாக்குப்பிடித்து வளர்கின்றன. இப்படி பல்வேறு மரங்களுக்கும் வளர்ச்சிக்கு குறிப்பிட்ட காலம் உண்டு. மரங்களை அதிகளவில் வளர்த்து, மழை வளம் பெறுவோம்...


Next Story