புதுமையான ஐ.டி.ஐ. படிப்புகள்..!


புதுமையான ஐ.டி.ஐ. படிப்புகள்..!
x
தினத்தந்தி 19 March 2023 2:29 PM GMT (Updated: 28 March 2023 10:09 AM GMT)

புதுமையான படிப்புகளும் இருக்கின்றன. அப்படி அதிகம் அறியப்படாத சில ஐ.டி.ஐ. படிப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம்...

ஐ.டி.ஐ. படிப்புகள் என்றுமே 'எவர்கிரீன்' ஆனவை. 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு படித்து முடித்தாலே போதும், நிறைய ஐ.டி.ஐ. படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். எலக்ட்ரீசியன், பிட்டர், கார்பெண்டர், பிளம்பர், மெக்கானிக், வெல்டர், டர்னர் போன்ற ஐ.டி.ஐ. படிப்புகளைப் பற்றி நமக்கு அதிகம் தெரியும் என்பதால் அதுபற்றி அதிகம் விளக்க வேண்டியதில்லை. ஆனால் இவற்றை தாண்டி, புதுமையான படிப்புகளும் இருக்கின்றன. அப்படி அதிகம் அறியப்படாத சில ஐ.டி.ஐ. படிப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம்...

பேட்டன் மேக்கர்

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் படிப்பை தேர்வு செய்யலாம். 2 ஆண்டு படிப்பு இது. மரப்பலகைகள், பிளாஸ்டிக், உலோகங்கள், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், துணி, ரப்பர், தோல் போன்றவற்றைக் கொண்டு உருவங்கள், வடிவங்கள் உருவாக்குவது பற்றிய படிப்பு இது. கம்பெனி லோேகா, நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களுக்கான மோல்டுகள் தயாரிப்பு மற்றும் விதவிதமான உற்பத்தி பொருட்களை வடிவமைத்தல் போன்ற பலவித பணி வாய்ப்புகளை கொண்டது இந்த படிப்பு. எனவே குடிசைத் தொழில் நிறுவனங்கள் முதல் பெரிய பெரிய நிறுவனங்கள் வரை வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதை கலைத் தொழிலாகவும், கைத்தொழிலாகவும் செய்து சாதிக்க முடியும்.

குஜராத், அரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம் போன்ற 5 மாநிலங்களில் மட்டுமே இந்த படிப்புகள் வழங்கப்படுவதால் தமிழக மாணவர்கள் இதை அதிகம் அறிந்திருப்பதில்லை. இதனுடன் நெருங்கிய தொடர்புடைய மற்றொரு ஐ.டி.ஐ. படிப்பு மோல்டர். இதுவும் 2 ஆண்டு படிப்புதான். 6 மாநிலங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த படிப்பை தேர்வு செய்தால் எதிர்கால வாய்ப்புகள் பிரகாசமாகும் என்பதில் சந்தேகமில்லை.

டூல் அண்ட் டை மேக்கர்

கருவிப் பெட்டிகள், கருவிகள், போல்ட் நட்டுகள், ஸ்குரூக்கள், டிரைவர்கள், எந்திர மோல்டுகள், அளவிகள் தயாரிப்பது பற்றிய படிப்பு இது. தொழிற்சாலைகள் தோறும் இதற்கான வேலை வாய்ப்புகள் அதிகம். சண்டிகார், டெல்லி, அரியானா, கர்நாடகா, கேரளா, மகா ராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இந்த படிப்புகள் வழங்கப்படுகிறது. ஓராண்டு காலத்தில் இதை படிக்க முடியும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதை தேர்வு செய்து படிக்கலாம். தற்போது இதில் 3 ஆண்டு காலத்தை கொண்ட அட்வான்ஸ்டு படிப்புகளும் அறிமுகமாகி உள்ளன.

கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மெக்கானிக்

எங்கும் கணினிகளின் ஆதிக்கம் பெருகி வருவதால் கணினி சார்ந்த ஐ.டி.ஐ. படிப்புகளான கம்ப்யூட்டர் புரோகிராமிங் அசிஸ்டன்ட், ஹார்டுவேர் மெக்கானிக் போன்ற படிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. ஹார்டுவேர் பயிற்சியை சில பயிற்சிக்கூடங்கள் குறைந்த கால பயிற்சியாகவும், கோடைகாலப் பயிற்சியாகவும் வழங்குகின்றன. இதை டிப்ளமோ படிப்பாக தேர்வு செய்து படிப்பது நல்ல வேலைவாய்ப்பையும், சுயதொழில் வாய்ப்பையும் உருவாக்கக் கூடியது.

இதில் 2 ஆண்டு படிப்புகளும், 3 ஆண்டு படிப்புகளும் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் இந்த படிப்புகள் வழங்கும் கல்வி மையங்கள் உள்ளன. கோவையில் பெண்களுக்கான அரசு ஐ.டி.ஐ. கல்வி மையத்திலும் இந்த பயிற்சி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வாட்ச் மெக்கானிக்

நல்ல சுயதொழில் வாய்ப்புகளைக் கொண்டது 'வாட்ச் மற்றும் கிளாக் மெக்கானிக்' படிப்பு. ஸ்மார்ட்போன்கள் அதிகரித்த பிறகு கைக்கடிகாரங்கள் புழக்கம் சற்று குறைந்து போனது உண்மையே. ஆனால் ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையிலும் அழகிய சுவர்க்கடிகாரங்கள் இன்றும் அலங்கரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஸ்மார்ட்போன்களை ஓரம் கட்டும் வகையில் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் பேண்ட் சாதனங்கள் பெருகி வருகின்றன. எனவே எதிர்காலத்தில் வாட்ச் மெக்கானிசம் தெரிந்தால் நல்ல வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம். கேரளாவில் இதற்கான ஐ.டி.ஐ. படிப்பு படிக்க முடியும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

இதேபோல ரேடியோ மற்றும் டி.வி. மெக்கானிசமும் நல்ல வாய்ப்புகள் கொண்ட தொழிலாக உள்ளது. இன்டீரியர் டெக்கரேஷன் அண்ட் டிசைனிங் நாகரிக வளர்ச்சியால் கலை நயமிக்க கட்டுமானங்கள் வேகமாக பெருகி வருகிறது. கிராமப்புறங்களிலும் தனித்துவம் மிக்க அழகுடன் வீடுகளை கட்டுவதற்கு மக்கள் விரும்புகிறார்கள். கட்டிடங்களின் உட்புறத்தையும் நேர்த்தியாக அலங்கரிப்பது ஒவ்வொருவரின் ஆசையாக உள்ளது. இதை டிப்ளமோ படிப்பாக படித்தால் பிரகாசமான வேலைவாய்ப்புகள் உறுதி.

கட்டுமான நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்கூடங்கள் என எங்கும் இன்டீரியர் டெக்கரேட்டர்களின் தேவை உள்ளது. எதையும் அழகாக்க விரும்புபவர்கள் இந்த படிப்பை தேர்வு செய்து மனநிறைவுடன் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இதை படிக்க முடியும். சர்வேயர் நில அளவையர் படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் ஓராண்டில் நில அளவையர் படிப்பை முடித்து வேலையை எதிர்பார்க்கலாம்.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த படிப்புகளை தேர்வு செய்து படிக்கலாம். இவை பெரும்பாலும் 2 ஆண்டுகள் கொண்ட படிப்புகளாகும். அனைத்து நிறுவனங்களிலும் இந்த பணிகளுக்கு வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும். சிறுதொழில் தொடங்கும் வாய்ப்புகளும், உபரி வருமானம் ஈட்டும் தொழில்களாகவும் இவை உள்ளன.


Next Story