சைக்கிள் சாகச சவாரி பெண்மணி


சைக்கிள் சாகச சவாரி பெண்மணி
x

இந்தியா முழுவதும் தனி நபராக சைக்கிள் சவாரி செய்த பெண் என்ற பெருமையை பெற்றிருக்கிறார், பிரித்தி மாஸ்கே.

45 வயதாகும் இவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர். வயது வெறும் எண் மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தியா முழுவதும் சைக்கிளில் பயணித்து அசத்தி இருக்கிறார். இந்தியாவின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதி நோக்கி சைக்கிள் ஓட்டிய முதல் பெண்மணி என்ற சாதனைக்கும் சொந்தக்காரராகி இருக்கிறார்.

குஜராத்தின் எல்லையில் இருந்து அருணாச்சல பிரதேசம் வரை சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி இருக்கிறார். தனது பயணத்தின்போது பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டிருக்கிறார். இருப்பினும் சோர்வடையாமல் 14 நாட்களுக்குள் இலக்கை எட்டிப்பிடித்திருக்கிறார். குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அசாம், அருணாச்சல பிரதேசம் என இவரது சைக்கிள் சவாரி நீண்டிருக்கிறது. மனச்சோர்வை விரட்டும் நோக்கத்தில் இந்த சைக்கிள் பயணத்தை தேர்வு செய்திருக்கிறார். உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அது அமைந்திருக்கிறது.

சைக்கிள் பயணத்தை தொடங்கிய முதல் 10 நாட்களில் தினமும் 350 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டி இருக்கிறார்.

தினமும் சராசரியாக 19 மணி நேரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தேசுவில் கட்டப்பட்டு வரும் உயரமான சாலைகளில் பலத்த காற்று வீசியதால் சைக்கிள் ஓட்டுவது கடினமாக இருந்தது. தூக்கமின்மை, உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், சைக்கிள் பயணம் உற்சாகத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.


Next Story