ஆங்கிலேயர்கள் வசம் சென்று ராணியின் கிரீடம் முதல் செங்கோல் வரை அலங்கரிக்கும் உலகப்புகழ் பெற்ற பொக்கிஷங்கள்..!


ஆங்கிலேயர்கள் வசம் சென்று ராணியின் கிரீடம் முதல் செங்கோல் வரை அலங்கரிக்கும் உலகப்புகழ் பெற்ற பொக்கிஷங்கள்..!
x

Images Credit:ANI

தினத்தந்தி 10 Sep 2022 11:50 AM GMT (Updated: 10 Sep 2022 12:18 PM GMT)

உலகப்புகழ் பெற்ற பல விலைமதிப்பற்ற பொருட்கள் இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

உலகப்புகழ் பெற்ற கோஹினூர் வைரம் மட்டுமல்ல, பல விலைமதிப்பற்ற பொருட்கள் இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அப்படி ஆங்கிலேயர்களால் கொண்டு செல்லப்பட்ட பொக்கிஷங்கள் சிலவற்றை காணலாம்:

திப்பு சுல்தானின் மோதிரம்:

மைசூரின் ஆட்சியாளர் மைசூரின் புலி என அழைக்கப்படும் திப்பு சுல்தான் 1799 இல் ஆங்கிலேயர்களிடம் போரில் தோற்றபோது, அவரது கொல்லப்பட்ட உடலில் இருந்த வாள் மற்றும் மோதிரத்தை திருடினர். இந்த வாள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது, ஆனால் 2014 இல் ஆங்கிலேயர்களால் இந்த மோதிரம் 145,000 யூரோக்கு ஏலம் விடப்பட்டது. மத்திய லண்டனில் நடந்த ஏலத்தில் 41.2 கிராம் மோதிரம் வெளியிடப்படாத ஏலதாரருக்கு அதன் மதிப்பிடப்பட்ட விலையை விட 10 மடங்குக்கு விற்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆப்பிரிக்க வைரம்:

தி கிரேட் ஸ்டார் ஆப்பிரிக்க வைரம் சுமார் 530 காரட் எடை கொண்டது. 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புமிக்கது. இந்த வைரம் 1905இல் தோண்டி எடுக்கப்பட்டது. பின் அது 7ம் எட்வார்டு மன்னருக்கு அளிக்கப்பட்டது.

அதன்பின் காலனித்துவ ஆட்சி முறையின் கீழ் ஆங்கிலேயர்களால் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட பொக்கிஷங்களுள் இதுவும் ஒன்றாக மாறியது. இந்த வைரம் இப்போது ராணியின் செங்கோலில் பொறிக்கப்பட்டுள்ளது.


ரொசெட்டா கல்:

ரொசெட்டா கல் என்பது, கல்வெட்டின் ஒரே பக்கத்தில் இரு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கல்வெட்டு ஆகும். இது கி. மு 196 ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது.

196 கி.முக்கு முந்தைய காலகட்டத்தை சார்ந்த இந்த கல் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் உள்ளது. பல தொல்பொருள் ஆய்வாளர்கள், இந்த கல் ஆங்கிலேயர்களால் எகிப்திலிருந்து கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதற்கு பல சான்றுகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

1800களில் பிரான்சுக்கு எதிரான போரில் இங்கிலாந்து வெற்றி பெற்ற பின், இந்த கல் ஆங்கிலேயர்களால் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட பொக்கிஷங்களுள் ஒன்றாக மாறியது என்று வராலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


எல்ஜின் மார்பிள் கற்கள்:

ஆங்கிலேய அரசு அதிகாரியான எல்ஜின் பிரபு 1803இல், கிரீசில் உள்ள பார்த்தீனான் சுவருகளில் இருந்த மார்பிள் கற்களை லண்டனுக்கு எடுத்து வந்ததாக ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. இதன் காரணமாக பார்த்தீனான் சுவரில் உள்ள மார்பிள் கற்களுக்கு எல்ஜின் மார்பிள் என்ற பெயர் வந்தது.

1925ம் ஆண்டு முதல் எல்ஜின் மார்பிள் கற்களை கிரீசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு கோரி வருகிறது. எல்ஜின் மார்பிள் கற்கள் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் உள்ளன.


இவை மட்டுமன்றி ஷாஜகானின் மது கோப்பை, ஹெவியா பிரேசிலியன்சிஸின் விதைகள், அமராவதி மார்பிள்ஸ், மகாராஜா ரஞ்சித் சிங் சிம்மாசனம் என பல்வேறு பொருட்கள் இங்கிலாந்து வசம் உள்ளன.


Next Story