'ஸ்டார்ட்-அப்' வெற்றியாளர்களின் வெற்றி ரகசியம்..!


ஸ்டார்ட்-அப் வெற்றியாளர்களின் வெற்றி ரகசியம்..!
x

ஸ்டார்ட்-அப் என்ற வார்த்தை இளைஞர்கள்-இளம் பெண்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவிக்கொண்டிருக்கிறது. சின்ன ஐடியாவை, சிறப்பாக முயற்சி செய்து... தங்களது தொழில் வாழ்க்கையை கட்டமைத்து கொள்கிறார்கள்.

ஓலா, ஓயோ, ஸ்விகி, செப்டோ... இப்படி நம் கண்முன் தென்படும் பல நிறுவனங்களும், சிறு இளைஞர்களின் முயற்சியினால், சின்னதாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள். அவைதான், இன்று நம் இந்தியாவையே ஆட்சி செய்கின்றன.

சமீபத்தில் ஸ்டார்ட் அப் கொள்கையின் மூலம் வெற்றி பெற்றவர்களை கொண்டு, இளைஞர்களுக்கான கருத்தரங்கு ஒன்று மும்பையில் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிறுவனர்கள் பாவிஷ் மற்றும் அங்கித் (ஓலா), நந்தன் மற்றும் ராகுல் (ஸ்விகி), ரிதேஷ் (ஓயோ) ஸ்டார்ட் அப் பற்றிய பல இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அதில் சிலவற்றை தொகுத்திருக்கிறோம்.

* 'ஸ்டார்ட்-அப்' முயற்சியின் வெற்றி பார்முலா என்ன?

தொழில் சிந்தனை (ஐடியா), கவனம் (போகஸ்), செயல்முறைப்படுத்துதல் (எக்ஸிகியூஷன்), முதலீடு (இன்வெஸ்ட்மெண்ட்), பொறுமை (பேஷன்ஸ்)... இவை ஐந்தும்தான் வெற்றி பார்முலா. நீங்கள் தொடங்கும் தொழில் முயற்சியின் 'ஐடியா' வித்தியாசமானதாகவும், வாடிக்கையாளர்களுக்கு தேவை மிகுந்ததாகவும் இருக்க வேண்டும். நம்முடைய தொழில் யோசனையில் முழு கவனத்துடன் இருந்து, நினைப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு சிறு முதலீடும், நிறைய பொறுமையும் அவசியம். அதேபோல, உங்களுடைய தொழில் முயற்சி சம்பந்தமாக பிறர் கூறும் (பீட் பேக்) கருத்துகளை உள்வாங்கும் மனப்பக்குவமும் அவசியம்.

* யாரெல்லாம் 'ஸ்டார்ட்-அப்' நிறுவனம் தொடங்கலாம்?

ஸ்டார்ட் அப் தொடங்க, வயது தடையில்லை. யார் வேண்டுமானாலும் 'ஸ்டார்ட்-அப்' தொடங்கலாம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இரு கல்லூரி மாணவர்கள் தொடங்கிய 'செப்டோ' என்ற ஸ்டார்ட் அப் முயற்சி, இன்று கோடிக்கணக்கான வர்த்தகமாக மாறியிருக்கிறது. அதனால் பள்ளி-கல்லூரி மாணவர்கள், குடும்ப தலைவிகள், பணியில் இருப்பவர்கள் என யார் வேண்டுமானா லும் 'ஸ்டார்ட்-அப்' நிறுவனம் தொடங்கலாம். ஆனால் நீங்கள் தொடங்கும் ஸ்டார்ட் அப் சேவை, வாடிக்கையாளர்களுக்கு தேவையானதாகவும், நடப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.

* 'ஸ்டார்ட் அப்' முயற்சி எந்தெந்த துறையினருக்கு ஏற்றது?

உணவு துறை, உற்பத்தி துறை, மென்பொருள் தயாரிப்பு, சேவை தொடர்பானவை... இப்படி எல்லா துறைகளிலும் 'ஸ்டார்ட்-அப்' தொடங்கலாம்.

* 'ஸ்டார்ட்-அப்' தொடங்க, பெரிய முதலீடு தேவைப்படுமே?

'ஸ்டார்ட்-அப்' என்பதே, சிறிய முதலீட்டில் தொழில் முயற்சியை முயன்று பார்ப்பதுதான். ஆனால் பெரிய முதலீட்டில் தொழில் தொடங்குபவர்களும் இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில், 'ஸ்டார்ட்-அப்' நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், நிறைய பண்டிங் (funding) முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிரவுட் பண்டிங் (crowd funding), ஏஞ்சல் பண்டிங் (angel funding), கேபிடல் வென்சர் பண்டிங் (capital venture funding)... இப்படி நிறைய முதலீட்டு உதவிகள் நடைமுறையில் உள்ளன. அதனால் உங்களது தொழில் சிந்தனை புதிதாக இருக்கும்பட்சத்தில் ரூ.10 லட்சம் தொடங்கி சில கோடிகள் வரை பண்டிங் முறையிலேயே நிதி திரட்டி, தொழில் தொடங்கலாம்.

* 'ஸ்டார்ட்-அப்' முயற்சியில், எதில் கவனமாக இருக்க வேண்டும்?

என்ன பொருள் தயாரிக்கிறோம், யாருக்காக தயாரிக்கிறோம், எவ்வளவு விலையில் கொடுக்கிறோம், என்ன லாபம் கிடைக்கும், நம்முடைய சந்தை கிராமமா, இல்லை நகரமா, நமக்கும் மற்ற போட்டியாளர்களுக்குமான வித்தியாசம் என்ன?, மார்க்கெட் தேவைகளை பூர்த்தி செய்திருக்கிறோமா?, பல்வேறு போட்டிகளுக்கு இடையே நிலைத்து நிற்க முடியுமா..?, நம்முடைய பொருள் வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமாக இருக்கிறதா?... இப்படி நம்முடைய 'ஸ்டார்ட்-அப்' பற்றிய 'மார்கெட் பிராடெக்ட் வேலிடேஷன்' சர்வே விஷயங்களில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, தொழில் பார்முலாக்களையும் மாற்றியமைக்க வேண்டும்.

* 'ஸ்டார்ட்-அப்' முயற்சிக்கு சிறந்த குழு அவசியமா?

நிச்சயமாக. நம்பகத் தன்மை கொண்ட குழு நிச்சயம் அவசியம். அப்போதுதான், உங்களது கனவுகளை, நினைவாக்க முடியும்.

* 'ஸ்டார்ட்-அப்' முயற்சி, சம்பள பணிகளை விட லாபம் நிறைந்ததா?

ஆரம்பத்தில் லாபத்தை எதிர்பார்க்கக் கூடாது. அந்தசமயத்தில் சம்பள பணிகளே சிறப்பானதாக தோன்றும். ஆனால் உங்களது தொழில் சூடுபிடிக்கும்போது, எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும்போது, பல மடங்கு சம்பளம் கிடைத்ததுபோல உணர்வீர்கள். அப்போது, 'ஸ்டார்ட்-அப்' லாபம் நிறைந்த முயற்சியாக தோன்றும்.

* அரசு வழியில் உதவிகள் கிடைக்குமா?

தனியார் மட்டுமின்றி அரசு வழிகளிலும் உதவிகள் உண்டு. மத்திய-மாநில கல்வி நிறுவனங்களில் இங்குபேஷன் மையங்கள் இயங்குகின்றன. அங்கு உங்களது சிந்தனைகளை காட்சிப்படுத்துவதன் மூலம் அரசு சார்ப்பிலும் உதவி பெறலாம். 'ஸ்டார்ட்-அப்' தொடங்கலாம்.


Next Story