பூதாகரமாக கிளம்பிய அடுத்த வைரஸ்... அச்சத்தில் உலக நாடுகள்... தப்பிப்பது எப்படி ?


பூதாகரமாக கிளம்பிய அடுத்த வைரஸ்... அச்சத்தில் உலக நாடுகள்... தப்பிப்பது எப்படி ?
x

உலக அளவில் தீவிரமடையும் வைரஸ் தொற்றால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கொரோனா தொற்று இன்னும் நம்மை விட்டு அகலாத நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதல் அமெரிக்காவில் பூதாகரமாக கிளம்பியது குரங்கு அம்மை. இந்த நோய் 1950களிலேயே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

உடலில் சாதாரண கொப்புளங்களை தான் ஏற்படுத்துகிறது என்ற வேளையில், அதன் தீவிரம் அடுத்தடுத்து மற்ற நாடுகளில் பரவி பீதியை ஏற்படுத்தியது. இதுவரை 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த நோயால், சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இறப்பு எண்ணிக்கை குறைந்த அளவில் உள்ளது ஆறுதலான செய்தியாகும்.

இந்த குரங்கு அம்மை வைரஸ் குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறும்போது,

இந்த குரங்கு அம்மை வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவரும் பரவக்கூடியது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு 2 முதல் 4 வாரங்கள் அதன் பாதிப்பு இருக்கும். நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளவர்கள், இணை நோய்கள் உள்ளவர்கள் மற்றும் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதுடன், மரணமும் ஏற்படுத்தவல்லது.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. அவர்களின் உடைகளை உடுத்தக்கூடாது. கொரோனா போல இது காற்றில் வேகமாக பரவுவது கிடையாது. நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்கவேண்டியது அவசியம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மை வைரசை சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனமாக அறிவித்தது. அண்டை மாநிலமான கேரளாவில் குரங்கு அம்மை பரவியுள்ள நிலையில், கன்னியாகுமரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி பரவியது. இதையடுத்து அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் புனேவிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குரங்கில் இருந்து தோன்றிய ஒரு வகை வைரஸ் என்றாலும், இது ஏற்கெனவே நமக்கு தெரிந்த சின்னம்மை, தட்டம்மை வகையை சேர்ந்தது தான் என்ற கருத்தும் நிலவி வருகிறது. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தள்ளி இருப்பதோடு, நாமும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.


Next Story