கோபமாக இருக்கும்போது கட்டுப்படுத்த வேண்டிய விஷயங்கள்


கோபமாக இருக்கும்போது கட்டுப்படுத்த வேண்டிய விஷயங்கள்
x

கோபத்தில் இருக்கும்போது பேசும் வார்த்தைகளும், எடுக்கும் முடிவுகளும் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடும். கோபத்தில் உச்சரிக்கும் வார்த்தைகளும், விவாதங்களும் மற்றவர்கள் நம் மீது கொண்டிருக்கும் மதிப்பை இழக்கச் செய்துவிடும்.

ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் கோபமாக இருக்கும்போது நாம் செய்யும் விஷயங்கள், பயன்படுத்தும் வார்த்தைகள் கடும் விளைவுகளை ஏற்படுத்திவிடும். அதனால் கோபமாக இருக்கும்போது ஒரு சில செயல்களை செய்யக்கூடாது.

* கோபம் கண்ணை மறைக்கும் என்பார்கள். என்ன பேசுகிறோம் என்பதை சுய பரிசோதனை செய்வதற்கான சூழல் அமையாது. கோபத்தில் வார்த்தைகளை கொட்டிவிடுவோம். சிலருக்கு என்ன பேசுகிறோம் என்பது கூட தெரியாது. அதனால் கோபம் குடிகொண்டிருந்தால் அமைதியாக இருந்துவிடுவதுதான் நல்லது. யாரிடமும் பேசாமல் தனிமை சூழலில் இருப்பது அதை விட சிறப்பானது.

* கோபமாக இருக்கும்போது விவாதங்களில் ஈடுபடக்கூடாது. வாகனம் ஓட்டுவதும் கூடாது. சிலர் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி தங்கள் வாகனத்தில் எங்காவது செல்வார்கள். வாகனம் ஓட்டும்போது கோபமும், ஆத்திரமும்தான் மனதை உலுக்கிக்கொண்டிருக்கும். அதனால் கவனச்சிதறல் ஏற்படும். விபத்துக்கு வழிவகுத்துவிடவும் கூடும்.

* கோபத்தில் இருக்கும் போது மனதை ஆசுவாசப்படுத்தும் செயல்களில் கவனம் செலுத்த வேண்டும். புத்தகம் படிப்பது, இசை கேட்பது, பிடித்தமான பொழுதுபோக்குகள் மீது கவனத்தை திசை திருப்புவது நல்லது.

* சிலர் கோபமாக இருக்கும் சமயத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றுவார்கள். இது நல்லதல்ல. உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

* கோபமான மனநிலையில் இருந்து மீள்வதற்கு மது பழக்கத்தை நாடுவதும் தவறானது. அது நாளடைவில் அந்த பழக்கத்திற்கு அடிமைப்படுத்திவிடும்.

* கோபம் சிலரை பலவீனமாக்கும். வாழ்க்கை மீது விரக்தியை உண்டாக்கும். எதுவுமே வேண்டாம் என்ற விரக்தியான மன நிலைக்கு இட்டு செல்லும். அப்படி அவசர கதியில் முடிவெடுப்பது எதிர்காலத்தை பாழ்படுத்திவிடும். நிகழ்கால நிம்மதியையும் கெடுத்துவிடும்.


Next Story