அடுத்த ஆண்டு உலகளாவிய கடும் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்; விரைந்து செயல்படாவிட்டால்.. ஐ.நா எச்சரிக்கை!


அடுத்த ஆண்டு உலகளாவிய கடும் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்; விரைந்து செயல்படாவிட்டால்..  ஐ.நா எச்சரிக்கை!
x

மனித உயிர்களையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற, உலக நாடுகள் இப்போதே செயல்பட வேண்டும் என ஐ.நா அறிக்கை எச்சரிக்கிறது.

நியூயார்க்,

ஐ.நா-வின் 'உலகளாவிய நெருக்கடி பதில் குழுவின்' அறிக்கை நேற்று வெளியானது. அதில், 2023-ல் பெரும் உணவு நெருக்கடி ஏற்படும் எனவும், அதைத் தடுக்க நம்மிடம் "நேரம் குறைவாக" உள்ளதாகவும் அந்த ஐ.நா அறிக்கை எச்சரிக்கிறது.

உக்ரைன் ரஷியா போரால், உணவு பாதுகாப்பு, ஆற்றல், எரிசக்தி மற்றும் நிதியுதவி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் பற்றிய சமீபத்திய அறிக்கை நேற்று வெளியானது. அதன்படி, உக்ரைனில் நடந்த போரால் 94 நாடுகளில் குறைந்தது 1.6 பில்லியன் மக்கள் நிதி, உணவு அல்லது எரிசக்தி ஆகியவற்றுள் ஏதாவது ஒரு துறையில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டெரஸ் கூறுகையில், "மனித உயிர்களையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற, உலக நாடுகள் இப்போதே செயல்பட வேண்டும். எந்தவொரு நாடும் அல்லது சமூகமும் இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க முடியாத கடுமையான வாழ்வாதார செலவுக்கான ஒரு நெருக்கடியை இந்த போர் உருவாக்கி உள்ளது" என்றார்.

இந்த நெருக்கடியானது, உலக நாடுகள் எதிர்கொள்ளும் பருவநிலை மாற்றம் போன்ற மற்ற சவால்களால் ஏற்படும் பாதிப்புகளை அதிகரிக்கச் செய்கிறது.

போர் தொடங்கியதில் இருந்து பசி பட்டினியின் அதிகரிப்பு அதிகமாகவும் பரவலாகவும் இருக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது. கடுமையான உணவுப் பாதுகாப்பற்றவர்களின் எண்ணிக்கை, தொற்றுநோய்க்கு முன்னர் 135 மில்லியனிலிருந்து இரட்டிப்பாகி, இரண்டே ஆண்டுகளில் 276 மில்லியனாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை 323 மில்லியனாக அதிகரிக்கக்கூடும்.

இந்த போர், உக்ரைனில் இருப்பவர்களுக்கு, ஒவ்வொரு நாளும் புதிய வகையில் துன்பத்தைத் தருகிறது. அதுவே, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு, பசி பஞ்சம் பட்டினி அலைகளை கட்டவிழ்த்துவிடுமோ என்று அச்சுறுத்துகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story