பிளாஸ்டிக் கழிவுகளை பைகளாக மாற்றும் பெண்மணி


பிளாஸ்டிக் கழிவுகளை பைகளாக மாற்றும் பெண்மணி
x

12 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து பைகள் தயாரித்து ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதித்திருக்கிறார் கனிகா அகுஜா.



டெல்லியை சேர்ந்த தொழில்முனைவோரான இவர், மறு சுழற்சி ஏன் அவசியம்? அத்தகைய பொருட்களை ஏன் தயாரிக்க வேண்டும் என்பது பற்றி பகிர்ந்து கொள்கிறார்..

"சிறு வயதில் குப்பைகள் கொட்டப்படும் இடத்துக்கு சென்று விளையாடுவேன். அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை சிறு மலையாக பாவித்து அதில் ஏறி, இறங்கி விளையாடி மகிழ்வேன்.

அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகளும் என்னுடன் குப்பை மேட்டில் விளையாடுவார்கள். அங்கு விளையாடினால் காயம் உண்டாகும் என்றும், நோய்த்தொற்று உண்டாகும் என்றும் வீட்டு பெரியவர்கள் கூறுவார்கள். அங்கு விளையாட செல்லக்கூடாது என்றும் அறிவுரை வழங்குவார்கள்.

நோயைப் பரப்பும் குப்பைக் கழிவுகளை ஏன் குவிக்கிறார்கள் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அந்தக் கேள்விதான், நான் வளர்ந்ததும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து பொருட்கள் தயாரிக்கும் யோசனை உருவாக காரணமாக அமைந்திருக்கிறது.

பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பைகள், லேப்டாப் உறைகள் உள்ளிட்ட பல வகையான பொருட்களை தயார் செய்து நாட்டின் பல பகுதிகளில் விற்பனை செய்கிறோம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.


இதுவரை 12 டன் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து வாலட்கள், பைகள், டேபிள் மேட்கள் உள்ளிட்டவற்றை தயாரித்துள்ளோம். இதன் மூலம் கடந்த நிதியாண்டில் ஒரு கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளோம்.

பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து பொருட்களை தயாரிக்க பலருக்கும் பயிற்சி அளித்து வருகிறோம். பிளாஸ்டிக் கழிவு இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வது குறித்தும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய பொருட்களாக தயாரிப்பது குறித்தும் நீண்ட ஆய்வு நடத்தினேன். தற்போது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் வண்ண, வண்ண பைகளை தயாரிக்கிறோம்.

மாதந்தோறும் 1 டன் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து பொருட்களைத் தயாரிக்கிறோம். அனைத்துத் தரப்பினரும் வாங்கும் வகையில் விலையை நிர்ணயித்துள்ளோம். கைவினைப் பொருட்களை தயார் செய்வதில் திறமைசாலிகளான ஆப்கானிஸ்தான் பெண் அகதிகளுடன் இணைந்து பாரம்பரிய கைவினைப் பொருட்களையும் தயாரித்து வருகிறோம்'' என்பவர் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் தயாராகும் பொருளை விற்பனை செய்வதில் சிரமங்கள் இருப்பதாகவும் சொல்கிறார்.

''பிளாஸ்டிக் கழிவில் இருந்து உருவான பொருட்களை நாங்கள் ஏன் பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்று பலரும் கேட்கிறார்கள். கழிவு பொருட்களாக இருக் குமோ? தரம் இல்லாததாக இருக்குமோ? என்று யோசிக்கிறார்கள். மக்கள் மனநிலையை மாற்ற இன்னும் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது" என்றார்.


Next Story