புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 140 தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகள்


புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 140 தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

கரூர்

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் நொய்யல் அருகே வேட்டமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வீரர்களுக்கான தற்காலிக பயிற்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த மையத்தில் கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் சந்திரகுமார் (கரூர்), துரை (நாகப்பட்டினம்), வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் மற்றும் 5 தீயணைப்பு நிலைய அலுவலர்கள், 10 முன்னணி தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 140 தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு தீயணைத்தல், மீட்பு பணிகள், விபத்துக்களில் சிக்கியவர்களை மீட்டல், மலையேற்றம், யோகா, தீயணைப்பு கருவிகளை இயக்குதல், மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி, தடை தாண்டுதல், ஏணி ஏறுதல், கயிறு ஏறுதல், நீச்சல், அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.


Next Story