வீடுகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; முதியவர் கைது


வீடுகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; முதியவர் கைது
x

பவானி, சித்தோட்டில் வீடுகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 200 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முதியவர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு

பவானி, சித்தோட்டில் வீடுகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 200 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முதியவர் கைது செய்யப்பட்டார்.

ரகசிய தகவல்

பவானியை சேர்ந்த முதியவர் ஒருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சித்தோடு பகுதியில் உள்ள கடைகளுக்கு வேன் மூலம் சென்று விற்பனை செய்து வருவதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் சித்தோடு அருகே உள்ள பட்டறை மேடு பகுதியில் சித்தோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் அருகே சந்தேகப்படும் வகையில் வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. உடனே போலீசார் அந்த வேனை சோதனையிட்டதுடன், அருகே உள்ள வீட்டிலும் சோதனையிட்டனர்.

புகையிலை பொருட்கள்

அப்போது அந்த வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 140 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அந்த வீட்டில் இருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர் பவானி சொக்காரம்மன் நகர் பகுதியை சேர்ந்த வில்சன் (வயது 63) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து வேனில் ஏற்றி கடை கடையாய் சென்று விற்றதும்,' தெரியவந்தது. மேலும் சொக்காரம்மன் நகரில் உள்ள அவருடைய வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததையும் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர். இதையடுத்து சொக்காரம்மன் நகரில் உள்ள வில்சனின் உறவினர் வீட்டில் பவானி மற்றும் சித்தோடு போலீசார் சோதனையிட்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து வில்சனை போலீசார் கைது செய்ததுடன், வீடுகளில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட வேன் ஆகியவற்ைறயும் பறிமுதல் செய்தனர்.

நம்பியூர்

நம்பியூரை அடுத்த குருமந்தூர் ஆயிபாளையத்தில் உள்ள மளிகை கடையில் தமிழக அரசால் தடை ெசய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக குமார் (35) என்பவரையும், புதுசூரியபாளையம் பகுதியில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக கேரள மாநிலம் கொள்ளக்காட்டை சேர்ந்த தாசன் (50) என்பவரையும் நம்பியூர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் 2 பேரிடம் மொத்தம் 36 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story